பாஜக கூட்டணியில் ஹவுஸ்புல்லான தொகுதிகள்! தமிழக மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடவில்லை?
சென்னை: மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடாமல் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பையும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பார் என்றும் தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதாவது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் (தனித்து) ஆகியவை போட்டியிடுகின்றன.

இதில் திமுக, அதிமுக கூட்டணி பங்கீடுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில் ஓபிஎஸ் அணி, பாஜகவுடன் கூட்டணி என அறிவித்திருந்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொதுக் கூட்ட மேடைகளில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தொகுதியைதான் கொடுப்போம் என்றும் அதுவும் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் பாஜக கறார் காட்டியதாக தெரிகிறது. அதிலும் தேனி தொகுதியை தர பாஜக மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. மேலும் ஓபிஎஸ்ஸுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட விருப்பமில்லை என தெரிகிறது.
எப்படியும் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன என்றார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
39 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் பாமக 10, அமமுக 2, தமாகா 3, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி , இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மொத்தம் 39 தொகுதிகளும் பாஜக கூட்டணியில் ஹவுஸ் புல்லாகிவிட்டது. ஓபிஎஸ் கூட்டணியில் உள்ள இழுபறி குறித்து செய்தியாளர்கள், அண்ணாமலையிடம் கேட்ட போது கூட அவர், ஓபிஎஸ் விரைவில் அறிவிப்பார். நாங்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை ஓபிஎஸ் பேட்டிக்கு பிறகு அறிவிப்போம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வரும் லோக் சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இன்னும் சற்று நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிகிறது. தேர்தலில் போட்டியிடாவிட்டால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்தும் அவர் அறிவிப்பார் என தெரிகிறது. ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் சிலர் புறக்கணித்துவிட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications