5 வருஷத்தோடது! 20 நிமிடத்தில் கொட்டிய ஓபிஎஸ்.. இபிஎஸ்ஸுடன் நீயா- நானா மோதலுக்கு தயாராகிவிட்டாரா?
சென்னை: இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ பிரச்சினை வந்த போது மவுனம் காத்த ஓபிஎஸ் நேற்று அவர் கொடுத்த பேட்டியின் மூலம் மோதலுக்கு தயாராகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று இரவு திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒற்றை தலைமை என்பது அதிமுகவுக்கு தேவையில்லை. அதை நானும் விரும்பவில்லை எடப்பாடி பழனிச்சாமியும் விரும்பவில்லை.
ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது என சுமார் 20 நிமிடங்களாக பல்வேறு குமுறல்களை கொட்டி தீர்த்துவிட்டார்.

முதல்வர் ஆயத்தம்
கிட்டதட்ட சசிகலா முதல்வராக ஆயத்தமான போது தர்மயுத்தம் நடத்தி அன்று இரவே பிரஸ் மீட் வைத்தது போல் நேற்றைய தினமும் இரவு நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனதில் இருந்த அத்தனை கவலைகளையும் கொட்டிவிட்டார். இத்தனை நாட்களாக பொறுமையாக இருந்த ஓபிஎஸ் இன்று எல்லா விவகாரங்களையும் உலகிற்கு காட்டி விட்டார்.

ஒற்றை தலைமை
அவர் சொன்னதில் முக்கியமான விஷயம்- ஒற்றை தலைமை தேவையில்லை, பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து என்னை நீக்க முடியாது. ஒற்றை தலைமை குறித்து மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் இதுவரை தன்னிடம் அது குறித்து பேசவில்லை.

கேள்விகள்
ஒற்றைத் தலைமை குறித்து இத்தனை நாட்களாக பேசாமல் இப்போது ஏன் பேசுகிறார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ மனக் கசப்புகள் வந்தாலும் சிரித்த முகத்துடன் (மனதில் கோபம் இருந்தாலும் ) அத்தனையையும் கடந்து சென்ற ஓபிஎஸ் இன்று பிரஸ்மீட்டை கூட்டுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

எடப்பாடி தரப்பு
இவ்வளவு ஏன் எடப்பாடி தரப்பே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட நேற்று முன் தினம் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ஓபிஎஸ். ஆனால் இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் குமுறியிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் எடப்பாடி தரப்புடன் மோத துணிந்துவிட்டார் என்றே தெரிகிறது.

தலைமை அலுவலகம்
அதிலும் நேற்று காலை தான் தலைமை அலுவலகத்திற்கு வருவதை விரும்பாத சிலர் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு வெளியேறியதால், தான் என்னை ஓரங்கட்ட முடியாது என்ற வார்த்தையை பிரயோகித்துள்ளார். எது எப்படியோ இரட்டை தலைமை என்றால் நான் ரெடி, ஒற்றை தலைமை என்றால் மோதி பார்க்க தானும் ரெடி என்பதை எடப்பாடி தரப்புக்கு மறைமுகமாக ஓபிஎஸ் சொல்லியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications