ஐயோ தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கு.. மறக்க முடியுமா? நினைவுகளை பகிர்ந்த ஓபிஎஸ்
தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே எனக்கு அலர்ஜியாக இருக்கிறது என ஓபிஎஸ் உருக்கமாக தெரிவித்தார்.
சென்னை: ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் என் மீது தண்ணீர் பாட்டிலை வீசியதால் அதை பார்த்தாலே எனக்கு அலர்ஜியாக இருக்கிறது என ஓபிஎஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வைத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் இந்த தீர்மானத்திற்கு கோர்ட்டில் தடை வாங்கினார்.
இதையடுத்து பொதுக் குழு கூட்டத்திற்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரை உள்ளே வரவிடாமல் தடுத்தனர். அவருக்கு எதிராக கடும் கோஷங்களை எழுப்பினர். ஓபிஎஸ் பிரச்சார வாகனத்தில் வந்திருந்தார்.

வாகனத்திற்கு வழிவிடவில்லை
அவரது வாகனத்திற்கு வழிவிடாமல் வெளியேறுமாறு அவரை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறியதால் அங்கு சலசலப்பு எழுந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வரும் வரை ஒரு அறையில் ஓபிஎஸ்ஸும் அவருடைய ஆதரவாளர்களும் அமர்ந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் மேடைக்கு ஓபிஎஸ் உள்ளிட்டோர் சென்றனர்.

தீர்மானங்கள்
அப்போது தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழியுமாறு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் முன்மொழிந்தவுடன் அந்த தீர்மானங்களை இந்த பொதுக் குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

இடைக்கால பொதுச் செயலாளர்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் தீர்மானம் வரும் ஜூலை 11 ஆம் தேதி (2022) நிறைவேற்றப்படும் என கூறியிருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மேடையில் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மேடையில் முழக்கம் எழுப்பினர்.

ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு
எதிர்ப்பு வலுக்கவே ஓ பன்னீர்செல்வம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் மீது கூட்டத்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்கள் வீசப்பட்டன. அதன் பின்பு அவர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றார். வெளியே போன போது அவருடைய வாகனம் பஞ்சராகி இருந்தது தெரியவந்தது. இது போன்ற சம்பவம் அதிமுக பொதுக் குழு , செயற்குழு வரலாற்றில் நடந்ததில்லை என பலர் கண்டனம் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் உருக்கம்
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்வுக்கான வேட்புமனு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் பேசுகையில் பிக்பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணமே எடப்பாடி பழனிசாமிதான். சர்வாதிகாரமாக தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம். தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது. பழைய நினைவுகள்தான் வருகின்றன என உருக்கமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications