இது கட்டண கொள்ளை.. தடுத்து நிறுத்துங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை
சென்னை : பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதுடன், நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் , முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து மொத்தமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும்போதும் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும்.
ரயில், விமானங்களில் முன்பதிவு முடிந்தபின்னர் பலர் ஆம்னி பேருந்துகளையே புக்கிங் செய்கிறார்கள். சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து வசதியாக இருக்கும். விரைவாக செல்ல முடியும்.

அதிக கட்டணம்
ஆம்னி பேருந்துகளில் படுக்கை , ஏசி வசதிகள், விரைவான பயணம் ஆகியவை இருப்பதால் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் டிக்கெட் விலை கடுமையாக இருக்கும். இந்நிலையில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முதல்வர் தடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகை நாட்கள்
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, " அக்.14-ம் தேதி (வியாழன்) ஆயுதபூஜை, 15-ம் தேதி (வெள்ளி) விஜயதசமி வருகிறது. அடுத்தடுத்த நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தொடர்ந்து 19-ம் தேதி (செவ்வாய்) மிலாடி நபி பண்டிகை வருகிறது.

3100 கட்டணம்
இதையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுவோர் அரசு, தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில், தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை வெவ்வேறு வழித்தடங்களில் இயங்குகின்றன. இப்பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக குளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை - கோவை வழித்தடத்துக்கான கட்டணம் ரூ.2.800 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை -கோவை விமானக் கட்டணம் ரூ.3,100 என்று இருக்க,பேருந்து கட்டணம் ரூ.2,800 வரை வசூலிக்கப்படுவதாகவும், அரசு தரப்பில் எச்சரித்தும், விதிமீறல்கள் தொடர்வதாகவும், அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

ரகசிய தொடர்பு
சம்பிரதாயத்துக்காக எச்சரித்துவிட்டு, இதை அரசு கண்டும், காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் ஆளும் கட்சியினருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறதோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே முதல்வர் தனி கவனம் செலுத்தி, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதுடன், நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications