2 சபாநாயகர்களை மலைபோல் நம்பும் ஓபிஎஸ்... எல்லா வகைகளிலும் எடப்பாடியுடன் யுத்தம் செய்யும் பன்னீர்
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வரும் நிலையில், 2 சபாநாயகர்களை நம்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் மனு
இந்த பொதுக்குழு விபரங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீசெல்வம் மனுத் தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் மனுவில் கோரி இருக்கிறார்.

ரவீந்திரநாத் நீக்கம்
இதற்கிடையே அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மகன்களான எம்.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காட்டமான பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் ரவீந்திரநாத். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி ஆதரவாளர்கள் பலரை கட்சியிலிருந்து நீக்கினார்.
Recommended Video

ஓம் பிர்லாவுக்கு கடிதம்
இதற்கிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, கட்சியிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம்
அதேபோல் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமித்துள்ள நிலையில், அதற்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். அதில், பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மனுக்கள் நிலுவையில் இருப்பதால் சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் வகையில் கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக நியாயமான முடிவை எடுக்கப்போவதாக அப்பாவு விளக்கமளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications