நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இழிவாக பேசுவதா? கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் கண்டனம் !
சென்னை: அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை இழிவாகப் பேசுவதா? என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: எல்லரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்து, மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு தமிழ்நாட்டு மக்களுக்காக தவ வாழ்வு வாழ்ந்து, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் இன்றளவிலும் குடிகொண்டிருப்பவர் ஜெயாலிதா.

இப்படிப்பட்ட ஆளுமைமிக்க தலைவரை, பார் போற்றும் தலைவரை, முதலமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சராக விளங்கியவரை, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற அரும் பெரும் தலைவரை அநாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, பண்பாடற்ற நாகூசும் வார்த்தைகளால் பேசியதுடன் ஜெயலலிதாவை அறிமுகம் செய்து வைத்ததில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்று அண்மையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. வருவாய்த்துறை அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பே திரைத்துறையில் அறிமுகாமி, 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். 1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, தாம் வைத்திருந்த தங்க நகைகளை லால்பகதூர் சாஸ்திரியிடம் வழங்கிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. அவரது ஆளுமைத் திறனை நன்கு உணர்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், ராஜ்யசபா எம்பி பதவிகளை ஜெயலலிதாவுக்கு வழங்கினார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை வளர்த்தெடுத்து, கட்டுக்கோப்புடன் வைத்திருந்து 4 முறை அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் அதிமுகவை லோக்சபாவில் 3-வது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவை தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. மேலும் முதல் முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை சிலை சின்னத்தில் வேட்பாளர்களை போட்டியிட வைத்து, மக்களின் அன்பான, மகத்தான ஆதரவோடு அதிமுகவின் வெற்றியை நிலைநாட்டிய பெருமை ஜெயலலிதாவை சேரும்.

எம்ஜிஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழக மக்களின் அன்பைப் பெற்ற ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியதில் தமக்கும் பங்கு உண்டு என்று வருவாயத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்கு தானே தம்ப்பட்டம் அடித்து கொள்வது கேலிக் கூத்தாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்க மாட்டார்கள். பதவிக்காக கட்சி மாறி அமைச்சராகியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தாம் சார்ந்துள்ள கட்சித் தலைமையை குளிர்விக்க வேண்டும் என நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சித் தலைவரை துதிபாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications