போக முடியாது.. பலம் இல்லையே! ஓபிஎஸ் வீட்டில் ஒலித்த குரல்.. விக்கித்து நின்ற 4 பேர்.. நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்பு கலக்கத்துடன் காணப்படுகிறதாம். நேற்று ஓபிஎஸ் வீட்டில் இது தொடர்பாக சில தீவிரமான ஆலோசனைகள் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் குட்டு என்பது போலத்தான் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மாறி மாறி குட்டு வாங்கி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். ஒரு பக்கம் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னது கடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே.
அந்த உத்தரவு காலாவதியாகிவிட்டது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றமும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது, நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டது.
ஆர்ஆர்ஆருக்கு போட்டியாக ரரக்கள் போடும் மாஸ் செட்! QR கோட் ரெடி! அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கும்?
பொதுக்குழு நடப்பது உறுதி?
இப்போது பொதுக்குழு நடக்குமா.. நடக்காதா என்பதை முடிவு செய்ய போவது சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வுதான். ஆனால் ஏற்கனவே பொதுக்குழு என்பது உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிட கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இது ஒரு Precedent. அதாவது எடுத்துக்காட்டு. இதை அடிப்படையாக வைத்து கோர்ட் பொதுக்குழுவை தடை செய்ய கூடாது எடப்பாடி தரப்பு வாதம் செய்யும். இதனால் ஒற்றை நீதிபதி இந்த வழக்கில் பொதுக்குழுவை தடை செய்ய வாய்ப்பு குறைவு.
ஓ பன்னீர்செல்வம்
இதனால் தற்போது ஓ பன்னீர்செல்வம் முன்பு இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது.
1 - பொதுக்குழுவிற்கு பொருளாளர் என்ற முறையில் செல்வது. பொருளாளராக கணக்குகளை தாக்கல் செய்வது.
2- பொதுக்குழுவை புறக்கணிப்பது.
ஆனால் இந்த இரண்டில் எதை செய்தாலும் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக முடியும்.
ஏன் சிக்கல்?
1- ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் என்ற முறையில் சென்றால்.. அவரே தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லாமல் ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். இது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
2- ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவை புறக்கணித்தால், கணக்கு வழக்குகள் பொதுக்குழுவில் தாக்கல் ஆகாது. இதை பயன்படுத்தி அவரை கட்சியில் இருந்தே நீக்க முடியும்.
எப்படி மாட்டி இருக்கேன் பார்த்தியாப்பா என்று வடிவேலு சொல்வது போலத்தான் ஓ பன்னீர்செல்வம் மாட்டி இருக்கிறார்.
புலம்பல்
இந்த நிலையில்தான் நேற்று ஓ பன்னீர்செல்வம் வீட்டில் நிர்வாகிகள் கூடி புலம்பி இருக்கிறார்களாம். அவருக்கு நெருக்கமான 4 தலைகள் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு போய் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து பேசி உள்ளனர். இதில் பொதுக்குழுவிற்கு நாம் போக முடியாது. மீண்டும் போய் அங்கு அசிங்கப்பட முடியாது. நமக்கு பலமும் இல்லை. ஆனால் போகாமல் இருந்தாலும் சிக்கல்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி ஓ பன்னீர்செல்வத்திடம் அந்த 4 நிர்வாகிகள் புலம்பி உள்ளனர்.
கட்சி நீக்கம்
கட்சியில் இருந்து நீக்கினாலோ, பதவியை பறித்தாலோ என்ன செய்வது. கோர்ட் நம்ம பக்கம் இல்லை. புது கட்சி தொடங்கினாலும் ஆட்கள் நம் பக்கம் வர மாட்டார்கள், என்று கனகனத்த குரலில் ஓ பன்னீர்செல்வத்திடம் அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர் பேசி இருக்கிறாராம். கொஞ்சம் சோகமாகவே இந்த உரையாடல் மொத்தமும் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் இறுதிக்கட்ட சமாதான பணிகளை செய்துவிடலாமா என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு யோசித்து வருகிறதாம்.
சமாதானம்
கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு பதிலாக சமாதானமாக சென்றுவிடலாம். வரும் நாட்களில் கட்சிக்கு உள்ளேயே இருந்து பெரிய பதவியை பெறலாம். பொருளாளர் பதவியை இழந்து விட கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் இறங்கி வரும் திட்டத்திலும் இருக்கிறாராம். எதுவும் நடக்கவில்லை என்றால் கடைசியில் சமாதானம்தான் ஒரே வழி என்று முடிவில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது.