“எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நிற்கும்”.. தவெக அரசியல் சூழலில் பரபரப்பை கிளப்பிய பஞ்சாங்க கணிப்பு
சென்னை: பராபவ ஆண்டு ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆளும் கட்சிக்கு பல்வேறு சவால்கள் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்துள்ள நிலையில், கூட்டணி அரசியல் மற்றும் எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆட்சியமைப்பை சுற்றி அரசியல் கட்சிகள் இடையே தீவிர ஆலோசனைகள் நடைபெறும் சூழலில், இந்த பஞ்சாங்க கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

பஞ்சாங்கம் கணிப்பு
பராபவ ஆண்டு ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஜோதிட கணிப்புகளின்படி, தான்யதிபதியான புதன் மீன ராசியில் நீச்ச பலத்துடன் இருப்பதால், அரசியல் மற்றும் நிர்வாக துறைகளில் பல முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நடிப்புத் துறையைச் சேர்ந்த ஒருவரின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜயோகம்
மேலும், எதிர்க்கட்சிகளுக்கு இந்த காலகட்டம் "ராஜயோகம்" தரக்கூடியதாக அமையும் என்றும், அவர்கள் ஒரே அணியில் இணைந்து செயல்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் சில முக்கிய கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி பெறும் என்றும், பல முக்கிய நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி பதற்றம்
ஆனால், சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் அடிக்கடி பதற்றம் மற்றும் மோதல் சூழல் உருவாகும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தின் இந்த கணிப்புகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அரசியல் மற்றும் ஜோதிட வட்டாரங்களில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications