ஆளுநர் மளிகைக்கு பறக்கும் விஜய் BMW கார்..! விஜய்க்கு சிபிஐ ஆதரவு.. சிபிஎம் விரைவில் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பதில் பெரும் குழப்பம், பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) செயற்குழு கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் நீடித்து நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன. இக்கூட்டம் முடியும் அதேவேளையில் சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தவெகவுக்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெளிவாக அறிவித்தார்.

சிபிஐ சொன்ன குட்நியூஸ் - விஜய் ஹேப்பியோ ஹேப்பி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற தீவிர ஆலோசனைக்குப் பிறகு, சிபிஐ சார்பில் ஆதரவுக் கடிதம் கட்சியின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டது. இந்த முடிவு தவெகவின் ஆட்சி அமைப்பு வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளை எட்டும் வகையில், மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரி வந்தது.
சிபிஐ தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம் தவெக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும்.
மக்கள் தீர்ப்பே முக்கியம் - எம்.ஏ.பேபி விளக்கம்
ANI-க்கு அளித்த பேட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, "பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தற்போது தவெகவுக்கே உள்ளது" என்று கூறினார். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையே முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
வேறு இடங்களில் இருந்து உறுப்பினர்களை "இறக்குமதி" செய்ய முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் சில பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், தற்போதைய நிலவரப்படி தவெகவுக்கே ஆட்சி அமைக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னையில் தொடர் ஆலோசனை
சென்னையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விரைவில் முழுமையான அறிவிப்பாக வெளியிடுவார்கள் என்றும் எம்.ஏ. பேபி தெரிவித்தார்.
மேலும், ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபிஎம் எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆளுநரை சந்திக்கிறார்
இந்தச் சூழலில் தவெக தலைவர் விஜய் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் சூழலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.














Click it and Unblock the Notifications