அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம் நீக்கம்! பொதுக்குழுவில் அதிரடி
சென்னை : அ.தி.மு.கவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கும் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தீர்மானம் கொண்டு வந்தார்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ்ஸை நீக்க தீர்மானம்
இந்நிலையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்க பொதுக்குழுவில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொருளாளர் ஓபிஎஸ் இடம் இருந்த அனைத்து அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ்ஸை நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்து வாசித்தார்.

ஓபிஎஸ் நீக்கம்
இந்த தீர்மானத்தை முன்மொழிந்த நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் கழக கொள்கைக்கு விரோதமாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். திமுக உடன் நட்பு பாராட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் இருந்து கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வருகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த விருப்பம் நிறைவேற்றும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது எனத் தெரிவித்தார்.

ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கம்
பொருளாளர், அடிப்படை உறுப்பினர் என அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களாகச் செயல்பட்டு வரும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டவர்களையும் நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது
இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது பொதுக்குழு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜேசிடி.பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நீக்கப்பட்டவர்கள் யாருடனும் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி அறிவிப்பு
இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications