எடப்பாடிக்கு போட்டி.. அடுத்த “மூவ்” மா.செக்கள் கூட்டம்.. முந்திச் செல்லும் ஓபிஎஸ்.. பரபர அறிவிப்பு!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயற்குழு கூட்டத்தை நடத்தவுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக, முன்கூட்டியே மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை திருச்சியில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது ஓபிஎஸ் அணி.
ஏப்ரல் 10ஆம் தேதி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும் அதிமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைe3qத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எடப்பாடி அணி: முன்னதாக, அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், பின்னர் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னரே 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் வரும் 10ம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில்: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் ஏப்ரல் 10 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அதிமுக ஒரும்ங்கிணைப்பாளர், பொருளாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என்றும், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும், எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அதற்கு முன்னதாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications