தேர்தலில் தோல்வியே அடைந்திராத ஓபிஎஸ்.. 3 முறை முதல்வர்.. முதல் முறையாக எம்.பி தேர்தலில் போட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ள ஓபிஎஸ், முதல் முறையாக எம்.பி தேர்தலில் நிற்கிறார்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பாஜக அணியில், ஓபிஎஸ் தரப்பு கேட்ட சீட்களை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தனது அணியின் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்த ஓபிஎஸ், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவது என தீர்மானித்துள்ளார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

O Panneerselvam is going to contest the Lok Sabha election for the first time

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி: அதிலும், ஓ.பன்னீர்செல்வமே ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனி சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தைப் பெறும் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ், தாமரை சின்னத்தில் நிற்க வேண்டாம் என முடிவெடுத்து, தனி சின்னத்தில் களமிறங்க உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக 1996 முதல் 2001 வரை பொறுப்பு வகித்துள்ளார். 2001 சட்டமன்றத் தேர்தலில் தான் முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2001ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் ஓ.பன்னீர்செல்வம்.

கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு: 2001 செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தால் ஜெயலலிதா, முதல் அமைச்சர் பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டபோது தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதாவால் அமர வைக்கப்பட்டார் ஓபிஎஸ். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன சில மாதங்களிலேயே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மிகப் பெரிய பொறுப்பைச் சுமந்தார் ஓ.பன்னீர்செல்வம். 21 செப்டம்பர் 2001 முதல் மார்ச் 1, 2002 வரை ஆறு மாதங்கள் தமிழக முதல்வராக செயல்பட்டார் ஓபிஎஸ்.

மீண்டும் 2006 சட்டசபை தேர்தலிலும் பெரியகுளம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவராகவும் சில காலம் செயல்பட்டார் ஓபிஎஸ். 2011 சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் ஓபிஎஸ். ஜெயலலிதா தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்று, 2011 மே 16 முதல் 2014 செப்டம்பர் 27 வரை பதவி வகித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, ​மீண்டும் தமிழக முதல்வர் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

3 முறை முதலமைச்சர்: கர்நாடக உயர்நீதிமன்றம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை அடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு மீண்டும் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தார் ஓபிஎஸ். 2016 சட்டசபை தேர்தலிலும் போடி தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆனார் ஓபிஎஸ். ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

6 டிசம்பர் 2016 அன்று, ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், சசிகலா தரப்பு உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தர்மயுத்தம் மேற்கொண்டார். அதன்பிறகு சசிகலா சிறை சென்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். சில மாதங்களில், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து கொண்டார். ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ்: இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் போடி தொகுதியில் வென்றார். எனினும், அதிமுக ஆட்சியை பறிகொடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். அதைத்தொடர்ந்து, அதிமுகவை கைப்பற்ற சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறார். நீதிமன்றங்களில் தொடர் பின்னடைவைச் சந்தித்து வந்தாலும், அதிமுகவை கைப்பற்றுவேன் எனக் கூறி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராகி வந்தது ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்பு விரும்பிய சீட்கள் ஒதுக்கப்படாத நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் களமிறங்க முடிவு செய்துள்ளார் ஓபிஎஸ்.

முதல் முறையாக எம்.பி பதவிக்கு ஓபிஎஸ் போட்டி: வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் ஓபிஎஸ். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட போராட்டம் தொடர்கிறது. தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுகிறேன். களத்தில் நின்று வென்று காட்ட முடிவெடுத்துள்ளேன். நிறைய தொகுதிகள் கொடுக்க முன்வந்தும் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

நகர் மன்றத் தலைவராக தொடங்கி, 5 முறை எம்.எல்.ஏவாகவும், 3 முறை முதலமைச்சராகவும், ஒரு முறை துணை முதலமைச்சராகவும் பதவிகளை வகித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் தோற்றதில்லை என்ற வரலாற்றை ஓ.பன்னீர்செல்வம் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+