அதிமுகவில் தொண்டனாக இருப்பதே எனக்கு பெருமை... தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு..!
சென்னை: அதிமுகவில் தொண்டனாக இருப்பதே தனக்கு பெருமை தான் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அந்த கூட்டத்தில் பேசிய அவர் அதிமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை விலாவாரியாக பட்டியலிட்டு விளக்கினார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக சென்னையில் துவக்கிய ஓ.பி.எஸ். வழக்கமான வெள்ளைச்சட்டையை தவிர்த்து இளம் மஞ்சள் நிற சட்டையுடன் மங்களகரமாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கடந்த கால அதிமுக நிகழ்ச்சிகளை விட இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு சற்று தடபுடலாகத் தான் இருந்தது.

திமுக என்ன செய்தது?
காங்கிரஸ் அமைச்சரவையில் மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பிய அவர் அதிமுக அரசின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவித்தார். தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளில் திமுக எதையும் செய்யவில்லை என்றும் இதனை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தின் அரசியலை பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என எப்போதும் எம்.ஜி.ஆரை. சுற்றியே சுழலும் என ஓ.பி.எஸ். கூறினார். எந்தக் கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அதிமுக திகழ்வதாகவும் நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்திய இயக்கம் அதிமுக என தெரிவித்தார்.

மக்கள் எஜமானர்கள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பாடும் வரிகளே அதிகம் இருந்தது. அவர்கள் செய்த சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பெரியளவில் குறிப்பிடவில்லை. இதனிடையே மக்கள் தான் எஜமானர்கள் என்றும் அந்த எஜமானர்களுக்கு நல்லது செய்யகூடிய ஒரே இயக்கமாக அதிமுக திகழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் சிந்தும் வியர்வை வீண்போகாது என்றும் மீண்டும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications