தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டம்.. அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார்! ஓபிஎஸ் பரபர கடிதம்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கமிஷனுக்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
நாட்டில் இருக்கும் போலி வாக்காளர்களைக் களையத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தெளிவுபடுத்தி உள்ள தேர்தல் ஆணையம், இதை மக்கள் தானா முன்வந்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம்
இதனிடையே வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் உடன் இணைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு முடிந்தவரை ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டைகளை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
மேலும், இதற்காக '6 பி' என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் உடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாகத் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உடன் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தலைமையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் தேர்தல் ஆணையம் இந்த கடித்ததை அனுப்பி இருந்தது. அதிமுக சார்பில் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் இதில் கலந்து கொள்வார்கள் என எடப்பாடி சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஓபிஎஸ் அறிவிப்பு
இந்தச் சூழலில் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று ஓ பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார். இது தொடர்பாகத் தமிழக மாநில தேர்தல் ஆணையர் சத்யபிராதா சாகுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதமும் எழுதியுள்ளார். எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பும் தனித்தனியாக நபர்களை அறிவித்து உள்ளதால், ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் கடந்த சில காலமாகவே உட்கட்சி பூசல் தொடர்ந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பல அதிரடி சம்பவங்கள் அங்கு நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களை ஈபிஎஸும், எடப்பாடி ஆதரவாளர்களை ஓபிஎஸும் நீக்குவதாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications