ஐயோ.. வேதனை.. எம்ஜிஆரை கேலி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ் பேட்டி!
சென்னை : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும், எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று ஓபிஎஸ் அணி சார்பில் புகழேந்தி உள்ளிட்டோர் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை சென்னை வரும் பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை, பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி கட்சி தொடர்பான கூட்டங்களைக் கூட்டுவது சட்டவிரோதம். செயற்குழு, பொதுக்குழு என்று எதுவாக இருந்தாலும் அது சட்ட விரோதம்தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது தான் தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. அது தான் செல்லும். இது தனி நீதிபதியின் தீர்ப்பு. நிரந்தர தீர்ப்பு இல்லை.
அதிமுக சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முன்னதாக உறுப்பினர் படிவம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்ட பிறகு, அடிப்படை தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். தொண்டர்களின் வாக்கு தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும். பொதுச் செயலாளர் தேர்வு முடிந்த பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆணையம் அனுமதி அளித்த பிறகு தான் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும். எனவே தற்போது நடைபெற்றுள்ள தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது" எனத் தெரிவித்தார்.
அதிமுக பிரச்சனைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல இருக்கிறோம் என்றும் வரும் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும், மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் போன்று கண்ணாடி, தொப்பி அணிந்து,எம்ஜிஆரை கேலி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பார்த்து அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். எனத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் கருத்து பற்றிய கேள்விக்கு, 'பதில் சொல்ல விரும்பவில்லை' என்று தெரிவித்தார். கர்நாடக தேர்தல் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும். வேட்பாளரை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications