இந்த நிமிடம் வரை பாஜக தலைவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.. பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்!
சென்னை: இந்த நிமிடம் வரை அகில இந்திய பாஜக தலைவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதைத் தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான அதிரடி நிலைப்பாட்டை எடுத்தார். பாஜக உடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார் ஈபிஎஸ். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூடுதலாக நெருக்கம் காட்டி வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் எனக் கூறி வருகிறார். இந்தநிலையில் திருச்சியில் புதிய விமான முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்தார். அப்போது விமான நிலையத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
மேலும், பிரதமர் மோடியிடம் சில நிமிடங்கள் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. முன்பு, ஓபிஎஸ்ஸை தனியாகச் சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுக்காமல் இருந்து வந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் கட்சியில் இருந்தபோது, அநியாயமாக நடந்த பொதுக்குழுவிலும், கட்சியினுடைய வரவு செலவு கணக்குகளை என்னை வாசிக்கவிடாமல் அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியின் பொருளாளராக சீனிவாசன் பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை நாங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக கேட்கப்போகிறோம். அதற்கு அவர்கள் உரிய பதிலளிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் இப்போது சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும்." என்றார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "திருச்சி வந்த பிரதமரை சந்திப்பதற்கு வாய்ப்புக் கேட்டிருந்தேன். பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுத்தனர். மனநிறைவோடு அதை நானும் செய்தேன். இந்தச் சந்திப்பில், அரசியல் எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்துக் கடிதத்தைக் கொடுத்தேன். வாய்ப்புகள் வரும்போது உறுதியாக டெல்லிக்குச் செல்வேன்.
இந்த நிமிடம் வரை அகில இந்திய அளவில் பாஜகவினர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications