போட்ரா வெடிய..ஓபிஎஸ் வீட்டு முன் ஆதரவாளர்கள் குத்தாட்டம்..ஸ்வீட் கொடுத்து கொண்டாட்டம்
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து அவரது வீட்டு முன்பாக குவிந்த ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாக குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதியன்று மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். அதிமுக கட்சியை விட்டு ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனையடுத்து ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகம்.. ஹைகோர்ட் பச்சைக்கொடி.. எம்ஜிஆர் மாளிகை செல்வாரா ஓபிஎஸ்?
சாதகமான தீர்ப்பு
அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23ஆம் தேதியன்று அதிமுகவில் இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஓபிஎஸ் வீடு உள்ள பகுதியான கிரீன் வேஸ் சாலையில் பெண்களும் ஆண்களும் இணைந்து குத்தாட்டம் போட்டனர். டிரம்ஸ் வாசித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
திருவிழா கோலம் பூண்ட ஓபிஎஸ் வீடு
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் வீடு கடந்த சில வாரங்களாகவே கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்றைய தினம் பொதுக்குழுவிற்கு எதிரான தீர்ப்பு வெளியாவது அறிந்த உடன் ஏராளமானோர் ஓ.பன்னீர் செல்வம் வீடு முன்பு குவிந்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் வீடு மீண்டும் விழாக்கோலம் பூண்டது. வழக்கில் வெற்றி பெற திறமையாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் இனிப்புகளை வழங்கி வாழ்த்து கூறினார்.
பெரியகுளத்தில் வெடித்த பட்டாசு
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சம்மது மாவட்ட பிரதிநிதி அன்பு பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் நகர் மன்ற குழு தலைவர் சண்முகசுந்தரம் நகர பொருளாளர் காமராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கொண்டாடினர்.
ஜெயலலிதா நினைவிடம் செல்லும் ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.