''விஷயம் தெரியாம பேசாதே! கோர்ட் கூண்டில் ஏற்றிடுவோம்''! அண்ணாமலைக்கு வார்னிங் தந்த ஓபிஎஸ் டீம்!
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி எதுவும் தெரியாத அண்ணாமலை, தேவையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகக் காட்டமாக எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இதைப் படிப்பவர்களுக்கு என்னாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர்செல்வம் அணி எதிர்க்கிறதா? என்ற ஆச்சரியமும் கேள்வியும் எழும். ஆனால் அது தான் உண்மை. ஆம், ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான பெங்களூர் புகழேந்தியும், மருது அழகுராஜூம் அண்ணாமலையை வார்த்தைகளால் வெளுத்து எடுத்துவிட்டனர்.

இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் முதலமைச்சர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டதே ஆகும். இதனிடையே இது குறித்து பிரஸ்மீட் நடத்திய பெங்களூர் புகழேந்தி, அண்ணாமலை இனியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்றார்.
அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி கோர்ட் கூண்டில் அவர் நிற்க வேண்டிய சூழல் வரும் எனவும் புகழேந்தி எச்சரித்தார். மேலும் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று தெரியாமல் ''நீ பேசக்கூடாது'' என அண்ணாமலையை சாடினார் பெங்களூர் புகழேந்தி. அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது தான் உண்மை என்றும் அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை தலையிடக் கூடாது என்பதை சற்று சீரியஸாக எச்சரிக்கும் தொணியிலேயே பேசினார் பெங்களூர் புகழேந்தி. இவர் இவ்வாறு இப்படி பேசிகிறார் என்றால் நிச்சயம் அது ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பேயில்லை. அண்ணாமலை மீதான தனது அதிருப்தியை ஓபிஎஸ் தான் இப்படி தனது அணி பிரமுகர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாரோ எனக் கருதத் தோன்றுகிறது.
அதேபோல் ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்விலும் ஓ.பன்னீர்செல்வம் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications