வர்றது கன்பாஃர்ம்.. ஏக குஷியில் ஓபிஎஸ் டீம்! கோவையில் நடக்கப் போகும் பிரம்மாண்டம்! அதகள அதிமுக..!
சென்னை: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது அதிமுகவின் கட்சி விவகாரங்கள். வாக்குப்பதிவுக்கு பிறகு பல்வேறு சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ஓபிஎஸ் வருகைக்கான முகாந்திரங்களும் இருப்பதால் பரபரப்பில் இருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக தற்போது ஒரு எம்பி கூட இல்லாத அளவுக்கு சோர்ந்து போயிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள் தொண்டர்களை சோர்வடைய செய்தது.

சசிகலா நீக்கம், டிடிவி தினகரன் வெளியேற்றும், ஓபிஎஸ் வெளியேற்றம் என முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஓரம் கட்டப்பட தற்போது சூத்திரதாரியான எடப்பாடிக்கே சிக்கல் முளைத்து இருக்கிறது.
இபிஎஸ்: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு கட்சியும் அவரது கைக்கு வந்தது. ஆனால் ஆட்சியை சிறப்பாக நடத்தியது போல கட்சியை அவரால் கொண்டு செல்ல முடியவில்லை என்கின்றனர் சீனியர்கள். அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை மிஞ்சி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் கூட ஓபிஎஸ் இருந்தபோது 60 சீட்டுகளை ஜெயிக்க முடிந்தது.
தொண்டர்கள் சோர்வு: ஆனால் அதற்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. கிராமங்களில் வலுவாக இருக்கும் அதிமுகவால் ஒரு சில ஒன்றியங்களை கூட கைப்பற்ற முடியாமல் போனது தொண்டர்களை சோர்வடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் தான் அதிமுகவில் தற்போது மீண்டும் ஒரு விவகாரம் பூதகரமாகி இருக்கிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீது ஒரு சில மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் இதன் காரணமாக தனித்தனியே கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
அதிமுகவில் பிளவு: மேலும் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக உடைந்துவிடும் என திமுக அமைச்சர் ஒருவரும் பற்றவைக்க விவகாரம் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து தனக்கு எதிராக கூட்டம் நடத்தியது யார்? தனக்கு எதிராக யார் வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அறிய எடப்பாடி பழனிச்சாமி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் முடிவுகளும் அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் வீசப்போவது உறுதி என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
மீண்டும் ஓபிஎஸ்: இதனிடையே தற்போது அதிமுகவில் மற்றொரு விவகாரமும் பேசு பொருளாக இருக்கிறது. முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தற்போது அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற ஒன்றை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவுக்குள் வரப்போவதாக தகவல்கள் பரவி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஆர்பி உதயகுமார் மறுத்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலின் பேரிலேயே நான் சொல்லுகிறேன் ஓபிஎஸ் கட்சிக்குள் வரமாட்டார் என அவர் கூறுகிறார். ஆனாலும் ஓபிஎஸ் வருவது உறுதி என்கின்றனர் நம்முடன் பேசிய சில அதிமுக மாவட்ட செயலாளர்.

பசும்பொன்: இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர் பசும்பொன்னிடம் நாம் பேசிய போது அதிமுகவில் மீண்டும் இணைவீர்களா என கேட்கிறார்கள்.. ஆனால் நாங்கள் தான் அதிமுக என்று ஏற்கனவே சொல்லி வருகிறோம்.. அதுதான் உண்மையும் கூட தற்போது அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் மிகவும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. தலைவர்களை கூட மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
நல்ல தீர்ப்பு: மக்கள் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.. எங்கள் தரப்பை பொறுத்தவரை அடுத்த கட்டமாக தொண்டர்களை ஒருங்கிணைக்க முடிவு செய்திருக்கிறோம்.. ஏற்கனவே ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் எங்கள் பக்கமே இருக்கின்றனர்.. அடுத்தடுத்த காலங்களில் நிச்சயம் நாங்கள் பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். கோவையில் மாநாடு நடத்துவதற்கான வேலைகள் துவங்கி இருக்கிறது. அடுத்த கட்டமாக தொண்டர்களை முழுமையாக ஒருங்கிணைத்து அதிமுகவை மீட்டெடுப்போம்" என்கிறார்.
அதிவில் நிலை என்ன?: இதுதொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது,"அதிமுகவில் மாவட்டத்திலும் பல அணிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த அதிமுக மாவட்டங்களாக இருந்த போது இல்லாத பிரச்சனை, தற்போது கிழக்கு மேற்கு என பிரித்த பிறகு பிரச்சனை தீவிரம் அடைந்திருக்கிறது.
குறிப்பாக மக்களவைத் தேர்தலில் வேஷ்டி பூசல் காரணமாக பல வேட்பாளர்கள் களமிறங்கவில்லை. இதனால் அதிமுக தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என்பது தெரிந்து தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்குப் பிறகு எவ்வித கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அதாவது ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரம் காட்டாமல் இருக்கிறார். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடியட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. ஒபிஎஸ் வருவாரா? என்பது சில வாரங்களில் தெரிந்து விடும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications