நடுத் தெருவில் நிற்பதை விட தனிக் கட்சிதான் வழி- ”அம்மா மக்கள் அதிமுக” தொடங்கும் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் அண்ணா திமுக என்ற தனி கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 3-ந் தேதி இது தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா திமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயத்துக்கு அத்தனை வழிகளிலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் புதிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புதான் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் சரித்திரத்தை முடித்து வைத்துவிட்டது.

ஓபிஎஸ் முன் நிற்கும் வாய்ப்புகள்: ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் தனிக் கட்சி தொடங்குவது, தினகரனின் அமமுகவில் இணைவது, பாஜகவில் இணைவது என்கிற 3 வாய்ப்புகள்தான் உண்டு. ஆனால் இன்னமும் தமக்கு ஆதரவாளர்கள், தொண்டர்கள் பலம் இருக்கிறது என நம்புகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் தனிக்கட்சி தொடங்குவதுதான் சரியான முடிவு என கருதுகிறாராம். அத்துடன் டிடிவி தினகரன் கட்சிக்கு போனால் அங்கேயும் நம்பர் 2 ஆகத்தான் இருக்க முடியும். பாஜகவுக்கும் போனாலும் இருக்கிற அக்கப்போர் பஞ்சாயத்துகளில் தமது எதிர்காலமே ஒன்றும் இல்லாமல் இருக்கிற இடமே தெரியாமல் போய்விடுவோம் என்கிற அச்சமும் இருக்கிறதாம்.
மந்திராலோசனை: இதனையடுத்துதான் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தமது ஆதரவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக, பாமகவில் முரண்பட்டு வெளியே போய் மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக்கட்சி நடத்திய அனுபவம் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உண்டு. அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தை தனிக் கட்சி தொடங்குவதுதான் சரி எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கினாராம்.
காஞ்சிபுரத்தில் அறிவிப்பு: இந்த தகவல் அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாம். காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 3-ந் தேதி தமிழ்நாடு தழுவிய பயணத்தை தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம். அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதற்குமான பயணத்தை தொடங்குகிற ஓ,பன்னீர்செல்வம் அன்றைய தினம், தமது புதிய கட்சியின் பெயரையும் அறிவிக்க இருக்கிறாராம். கட்சிப் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு கட்சி நிர்வாகிகளை பின்னர் அறிவிப்பாராம் ஓ.பன்னீர்செல்வம்.
புதிய கட்சிப் பெயர் இதுதான்: தற்போதைய நிலையில் அம்மா மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அமஅதிமுக- அம அண்ணா திமுக) என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மூவரது பெயர்களையும் குறிக்கும் வகையில்தான் இந்த பெயரை தேர்வு செய்தனராம். அம அண்ணா திமுகவின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணைப் பொதுச்செயலாளராக வைத்திலிங்கமும் இருப்பார்களாம். வழக்கம் போல அமஅதிமுக அவைத் தலைவர் பதவி பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்படுமாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செப்டம்பர் 3-க்குப் பின்னர் படிப்படியாக வெளியாகும் என்கின்றன ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தல் கூட்டணி: மேலும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மா மக்கள் அதிமுக கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாம். அதாவது ஓபிஎஸ்- டிடிவி தினகரன் தலைமையில் தமிழ்நாட்டில் 3-வது அணியை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாம். தற்போதைய நிலையில் திக்கு தெரியாத திசையில் நிற்கும் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இந்த அனியில் இணையவும் வாய்ப்பிருக்கிறதாம்.. அப்ப ஓபிஎஸ் இனி தனி கச்சேரிதான்!












Click it and Unblock the Notifications