மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தலாமா? - முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி!
சென்னை : அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்வதை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்வதை திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு, பொருளாதாரம் பாதிப்படையும், வேலை வாய்ப்பு இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லாத சூழல் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார் ஓபிஎஸ்.
4 முரண்கள்.. 'மாட்டிக்கிச்சு’.. வைத்தி சொன்னது ஞாபகம் இருக்கா? - பாயிண்டுகளை அடுக்கும் ஓபிஎஸ் டீம்!
தொழிற்கல்வி பாடப்பிரிவு
தமிழ்நாட்டில் 11, 12-ஆம் வகுப்புகளில் பொதுப் பாடப்பிரிவு, தொழிற்கல்வி பாடப்பிரிவு என இரு பாடத்திட்டங்கள் உள்ளன. தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொறியியல், வேளாண்மை, செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் அனைத்தும் பிராக்டிக்கலை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படித்தவர்கள் எளிதில் வேலை செய்யும் திறன் பெறுவார்கள். இந்நிலையில், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ் வேதனை
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதாரத்தில் ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால், தொழிற் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என பாரதியார் கூறியிருக்கிறார். இத்தகைய தொழிற்கல்விக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துவது வேதனையளிக்கிறது.
மூடு விழா நடத்தும் அரசு
அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டம், அம்மா மினி கிளினிக், ஜெயலலிதான பெயரிலான பல்கலைக்கழகத்தை ரத்து செய்வது வரிசையில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய திமுக அரசு உத்தரவிட்டிருப்பதை பார்க்கும்போது, நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துகிற அரசாக திமுக உள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவதாகவும், அதில் உள்ள மாணவர்கள் வேறு பாடப்பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா?
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதுதான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக சொல்லப்படுவது, மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய பழமொழிக்கு ஏற்றார் போல் அமைந்துவிடுகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு, பொருளாதாரம் பாதிப்படையும், வேலை வாய்ப்பு இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லாத சூழல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.
கோரிக்கை
எனவே, தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை அரசு ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி தொடந்து சிறப்பாக செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.