கூட்டணி பற்றி பேசினால் ஒழுங்கு நடவடிக்கை.. ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
சென்னை: கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். அதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினருக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தி உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறினார் ஓபிஎஸ்.

தமிழகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதே சமயத்தில், மோடியை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இது ஓபிஎஸ்ஸை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவானது முதல், தங்களை பாஜக தலைமை ஓரங்கட்டி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகினார். அதோடு, முதலமைச்சர் ஸ்டாலினை இரண்டு முறை அவர் சந்தித்து பேசியது பாஜகவையும், அதிமுகவையும் அதிர்ச்சியடையச் செய்தது.
தொடர்ந்து, ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என விவாதம் எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரனை தான் 6 முறை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் பொதுவெளியியில் போட்டு உடைத்தார் ஓபிஎஸ். இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதிமுகவை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், வருகின்ற சட்டசபை பொதுத் தேர்தலை நாம் எதிர்கொள்ளும் வகையில், எம்ஜிஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டி தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், திமுக ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அதிமுக அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகள் நடத்த வேண்டும்.
மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி குறித்த முடிவு கட்சி தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலினை ஒரே நாளில் 2 முறை சந்தித்துப் பேசியதும், பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியினருக்கும் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications