நம்பிக்கை இல்லைங்க.. திடீர் தீர்ப்பால் பொங்கிய ஓபிஎஸ்.. அதிகாலையில் பறந்த "அந்த" கால்.. 3 ஆபரேஷன்கள்
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு இன்று காலை நடக்க உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
எடப்பாடி பக்கம் தாவிய நிர்வாகிகள்.. குறைவான ஆதரவாளர்கள்.. நெருங்கிய நண்பர்கள் கூட எதிர் கேம்பிற்கு தாவியது என்று அடுத்தடுத்து தோல்விகளை தழுவி வந்த ஓ பன்னீர்செல்வம் இன்று அதிகாலை 5 மணிக்குத்தான் நிம்மதி மூச்சு விட்டுள்ளார். வரிசையாக பின்னடைவுகளை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம். ஆனால் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் எதையும் நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி தரப்பு கொஞ்சம் அப்செட்
இந்த தீர்ப்பு காரணமாக எடப்பாடி தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தடை மட்டும் வரவில்லை என்றால் இன்றே ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். இதன் மூலம் இன்றே பிரச்சனை தீர்க்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகி இருப்பார். ஆனால் தீர்ப்பு எதிராக வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் உற்சாகம்
ஆனால் ஓபிஎஸ் தரப்போ அதீத உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஒரு கட்டத்திற்கு மேல் நேற்று நம்பிக்கை இழந்துவிட்டதாம். அதாவது சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு 9 மணிக்கு கொடுத்த தீர்ப்பில், பொதுக்குழுவில் தனித்தீர்மானம் நிறைவேற்ற தடையில்லை என்று கூறியது. இதனால் அப்போதே ஓபிஎஸ் தரப்பு நம்பிக்கை இழந்துவிட்டதாம். நம்பிக்கையின்றிதான் அவர்கள் தரப்பு மேல்முறையீடு செய்தது.
என்ன செய்ய போகிறார்?
பொதுவாக இரவு நேரங்களில் இது போன்ற வழக்கை உயர் நீதிமன்றம் டிவிஷனல் பெஞ்ச் விசாரிக்காது. பெரிய தூக்கு தண்டனை, உயிர் போற அவசரம் என்றால் நீதிமன்றம் விசாரிக்கும். ஆனால் நேற்று ஓபிஎஸ்ஸுக்கு நேரம் நன்றாக இருந்தது போல.. இரவே வழக்கு எடுக்கப்பட்டு.. அப்போதே விசாரணையும் செய்யப்பட்டது. 2.41 முதல் அதிகாலை 4.50 மணி வரை இந்த விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஒற்றை தலைமை தொடர்பாக தனித்தீர்மானம் எதையும் நிறைவேற்ற கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகிழ்ச்சி
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்பார்க்காத ஓபிஎஸ் உற்சாகம் அடைந்துள்ளார். நம்பிக்கையே இன்றி இருந்த ஓபிஎஸ் தரப்பிற்கு இது ஆறுதல் கொடுக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. நம்பிக்கையே இல்லங்க.. நமக்கு ஆதரவா தீர்ப்பு வந்து இருக்கு. தர்மம் வெற்றிபெற்றுவிட்டது என்று ஓபிஎஸ் தன் வீட்டில் நம்பிக்கையாக காத்து இருந்த நிர்வாகிகளிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த பிரச்சனை இதோடு முடியவில்லை. இனிதான் மெயின் பிக்சர் என்று சொல்லும் அளவில் பல விஷயங்கள் இனி வரும் நாட்களில் நடக்க போகிறது.
3 பிளான்
ஏனென்றால் கண்டிப்பாக எடப்பாடி தரப்பு ஒற்றை தலைமைக்கு தொடர்ந்து முயலும் என்பதால் பிரச்சனை இப்போது முடியாது. இதனால் 3 விதமான பிளான்களை ஓபிஎஸ் தரப்பு வரும் நாட்களில் மேற்கொள்ளும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். முதல் விஷயம் எடப்பாடி தரப்பிடம் சமாதானமாக செல்வது. எடப்பாடியை பேசி பணிய வைத்து,. ஒற்றை தலைமை வேண்டாம் என்ற முடிவை எடுக்க வைப்பது. லோக்சபா தேர்தல் வரையிலாவது ஒற்றை தலைமை வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைப்பது.
சட்ட போராட்டம்
இது தொடர்பாக சமாதானம் பேசும் வகையில் எதிர் கேம்பிற்கு சில போன் கால்கள் அதிகாலையிலேயே சென்று இருக்கிறதாம். இதில் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்யும் வகையில் சில விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாம். இரண்டாவது விஷயம்.. சட்ட போரட்டத்தை தொடர்வது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 5 ஆண்டு ஆயுள் உள்ளது. அதனால் அது வரை அதை நீக்க கூடாது. பொதுச்செயலாளர் பதவி கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டது என்று கூறி சட்ட போராட்டம் செய்வது. பெரும்பாலும் ஓபிஎஸ் தரப்பு சட்ட போராட்டங்களை மேற்கொள்ள தீவிரமாக முயலும் என்று அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.
நிர்வாகிகளை இழுக்க பிளான்
கடைசியாக தன்னை விட்டு போன நிர்வாகிகளை மீண்டும் தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் முயல்வார் என்கிறார்கள். இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உருக்கமாக உரையாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த நிகழ்வில் நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வரும் வகையில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடன் நெருக்கமாக இருந்து எடப்பாடி பக்கம் சென்ற நிர்வாகிகளை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் வகையில் அவரின் செயல்பாடுகள் வரும் நாட்களில் இருக்கும் என்கிறார்கள்.