‘கோட் வேர்டு’.. ‘ஒற்றுமை ஓங்கட்டும்’.. ஓ.பன்னீர்செல்வத்தின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
சென்னை : அன்பும், அமைதியும் நிலவட்டும், ஒற்றுமை ஓங்கட்டும் எனக் குறிப்பிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பினரும் எதிர் தரப்பினரை மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
இணைந்து செயல்படுவோம் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்காத நிலையில், இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நாளை விநாயகர் சதுத்தி கொண்டாடப்படுவதையொட்டி, 'ஒற்றுமை ஓங்கட்டும்' எனக் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.

குறியீடாக வாழ்த்து
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதை உபதேசத்தை குறிப்பிட்டு சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், 'விநாயகப் பெருமானின் அருளால், அன்பும், அமைதியும் நிலவட்டும் ஒற்றுமை ஓங்கட்டும்' எனக் குறிப்பிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதூர்த்தியையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஓம் எனும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடடிணம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடலும், மன மகிழ்வுடனும் கொண்டாடி மகிழவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கடங்களை நீக்கி
சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும் என்பதும்; அதன்மூலம் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும் என்பதும் மக்களின் இறை நம்பிக்கையாகும்.

ஒற்றுமை ஓங்கட்டும்
இந்த நன்னாளில், வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேத விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது "விநாயகர் சதுர்த்தி" திருநாள் நல்வாழ்ந்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications