அன்புமணி ஃபர்ஸ்டு.. ஓபிஎஸ் நெக்ஸ்டு.. பாஜக தந்த ட்விஸ்டு! திரௌபதி நிகழ்வில் அண்ணாமலை செய்த காரியம்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரவு கேட்டு சென்னையில் கலந்துகொண்ட நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் காக்கவைக்கப்பட்டு அவருக்கு முன்பாக அன்புமணி ராமதாஸ் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

சென்னை வந்த முர்மு
இந்த நிலையில் இன்று திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை உச்சத்தை தொட்டிருக்கும் இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து சென்றார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முன்பே மேடையேறி திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் மேடையிலும் அவர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக உரையாற்றினார்.

அவமதிக்கப்பட்டாரா ஓ.பி.எஸ்?
இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முதல் அமர்வில் வாய்ப்பு அளிக்கப்பட்டு மேடையில் பழனிசாமி அமர வைக்கப்பட்டார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் மேடையில் அமராமல் கீழே அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டு சென்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அன்புமணி ராமதாஸ் மேடையில் பேச அழைக்கப்பட்டார்.

ஓ.பி.எஸ். பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் காத்திருப்பு அறையில் காக்க வைக்கப்பட்டிருந்த பின்னர், அவர் மூன்றாவது அமர்வில் பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அவர் நிகழ்வுக்கு வரும்போது அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து மேடைக்கு கீழ் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலையில் நேரில் சென்று அழைத்து வந்தார். அன்புமணிக்கு பின்னர் மேடையேறிய ஓ.பி.எஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளராகிய நான் என்று கூறி பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications