அதிமுக நீயா? நானா? ஓபிஎஸ் விட்ட ’புறா’ விடு தூது! நேராக எம்ஜிஆர் வீட்டுக்கே போன ’சின்னம்மா’ சசிகலா!
சென்னை : அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக கொடி ஏற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் தான் என கூறிவரும் சசிகலா முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வீட்டில் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
புரட்சித் தலைவர் மக்களால் அன்போது அழைக்கப்பட்ட எம்ஜிஆரால் தோற்றுவிட்டப்பட்ட ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக பொன் விழா ஆண்டை நிறைவுசெய்து, இன்றுடன் தேதி 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
திமுகவுக்கு மாற்றாக திமுகவில் இருந்தே உருவாகிய கட்சி என்றாலும், மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதனை நிறைவேற்றியும் காட்டியது. ஆம் திமுகவை ஆட்சியில்
இருந்து அகற்ற உருவாக்கப்பட கட்சி அதனை செய்தது. அதற்கு எம்ஜிஆர் எனும் ஆகப் பெரும் ஆளுமை தான் காரணம்.

அதிமுக பொன்விழா
பல இன்னல்கள் போராட்டங்கள் தேர்தல்கள் என பெரும் அரசியல் புயல்களை சந்தித்து சமாளித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த அதிமுக தற்போது அதிகார மோதலில் சிக்கித் தவிக்கிறது. திமுகவிடம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழந்த நிலையில் தற்போது ஒற்றை தலைமை தொடர்பான மோதலால் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளாக பிளவுண்டு கிடக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் 51வது தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். அந்த வகையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தமிழக முன்னாள் முதல்வர் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம்
இதேபோல அதிமுக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை தியாகராயர் நகரிலுள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் புகழேந்தி உள்ளிட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு ஒன்றினையும் திறந்து வைத்தார் ஓபிஎஸ், அப்போது புறாக்களையும் பறக்க விட்டார்.

சசிகலா மரியாதை
இந்நிலையில் அதிமுக இன்னும் எனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது.. தான் தான் அதிமுகவின் பொதுச்செயலாள.. பிரிந்துள்ள அனைவரையும் ஒன்று சேர்ப்பேன் எனக் கூறி வருவதோடு, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலாவும் எம்ஜிஆர் இல்லத்தில் மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அவருக்கு, அவரது ஆதரவாளர், செண்டை மேளம், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து உற்காக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து எம்ஜிஆர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications