அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தாச்சு பழைய ஓய்வூதிய அப்டேட்! முதல்வர் டேபிளில் ரிப்போர்ட்!
சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு தற்போது இடைக்கால அறிக்கையை அரசிடம் நேற்று சமர்ப்பித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வு திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து இந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம்தான் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதை அடுத்து சில மாநிலங்கள் மட்டும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கை.

பழைய ஓய்வூதிய திட்டம்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதனை வாக்குறுதியாக அளித்திருந்தது. இந்த நிலையில் ஆட்சி நிறைவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தன. இதை அடுத்து தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்வதற்காக அரசின் கூடுதல் தலைமை செயலர் கதன்தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. தற்போது அந்த குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
ககன்தீப் சிங் பேடி
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட திரு. ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது. பின்னர். உரிய அறிக்கையினை 2025-க்குள் செப்டம்பர் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பணியாளர்கள்
அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.
ஓய்வூதியதாரர்கள்
கடந்த எட்டு மாதங்களில், 7.36 இலட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 இலட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.
இடைக்கால அறிக்கை
சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஒன்றிய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இச்சூழ்நிலையில், இக்குழுவானது நேற்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications