பழைய ஓய்வூதிய திட்டம் வராதா? அரசு ஊழியர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்! தினகரன் நச் கோரிக்கை
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள அலுவலர் குழுவை வாபஸ் பெறுவது, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.. இந்த போராட்டத்தை சுட்டிக்காட்டிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் என காரணங்களை அடுக்கி தாமதம் செய்யாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்ற வருத்தமும் அரசு ஊழியர்களிடம் நிலவி வருகிறது.

கடந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தபடியே உள்ளன. பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது தொடர்பாக அரசு கமிட்டி அமைத்துள்ளதையும் விமர்சித்து வருகின்றன..
அமைச்சர் பெரியசாமி தந்த நம்பிக்கை
இந்நிலையில், கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று சொல்வது பொய்யானது.. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறார்.. பழைய ஓய்வூதியம் குறித்தும் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.
எனினும், கடந்த வாரம், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப் படும் என்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது
எனவே, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் அமைச்சர் பெரியசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு அமைச்சர், பள்ளி ஆசிரியர் இரண்டாவது நாள் வேலை நிறுத்தம் குறித்து, முதலமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர்களது ஓய்வூதியம் அதற்கான கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.. விரைவில் நல்ல முடிவு வரும்" என்று மீண்டும் உறுதி தந்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309-வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
72 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம்
கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும், செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
மீண்டும் மீண்டும் ஏமாற்றம்?
ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.
எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications