அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆடி முடிந்ததும் அடிக்குது ஜாக்பாட்! பழைய ஓய்வூதிய திட்டம் தான்!
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி மாதத்தில் இருந்தே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும் என்பதால் ஆகஸ்ட் முடிந்ததும் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வரும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தி வாக்குகளை சமாளித்து ஆதரவு வாக்குகளாக மாற்ற திமுக தலைமை முயன்று வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சி அமைய எப்போதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆதரவை திமுக இதுவரை பெற்று வந்திருக்கிறது.
வரும் தேர்தலிலும் அதனை தொடர வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் திட்டம். ஆனால் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டம், அரசு ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்குவதால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதிய உயர்வு பெறுகிறார்கள். ஆனால், NPS என்பது பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும், இதில் ஊழியர்கள் மற்றும் அரசு இருவரும் பங்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2023 ஆம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் இந்த நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 2021 தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தேர்தல் வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. எதிர்பார்த்தது போலவே திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இதனையடுத்து பல்வேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மாவட்ட அளவிலான போராட்டங்கள் தீவிர படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அடுத்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்தது ஜாக்டோ ஜியோ.
இதற்கிடையே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய ஐஏஎஸ் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்த குழு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாதத்துக்குள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரசு ஊழியர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அரசு அமைத்த குழு பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவுகளை சேகரித்து, இது தொடர்பான அறிக்கையை கிட்டத்தட்ட நிறைவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே இந்த அறிக்கை முதலவரிடம் ஒப்படைக்கப்பட இருக்கும் நிலையில் அம்மாத இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வரும் என்கின்றனர். 2026 தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவை பெற இந்த அஸ்திரத்தை முதலமைச்சர் எடுத்திருக்கிறார் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications