அடி தூள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆடி போய் ஆவணி வரட்டும்.. வருதுங்க பழைய ஓய்வூதிய திட்டம்
சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதமே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, 2003ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு, தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் இந்த குழு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர் கூட்டமைப்பு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் தமிழக தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் மாதத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நிகழ்வின் போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்த உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அரசு ஊழியர்கள் சங்கங்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கு இடம் கொடுக்காமல் அரசு ஊழியர்களின் ஆதரவை பெறும் வகையில் முன்னதாகவே பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications