Omni bus: கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சொந்த ஊர் போறவங்களுக்கு ஆம்னி பஸ்கள் கொடுத்த ஷாக்.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தனி நபர் ஒருவருக்கு ரூ.4,500 வரை வசூல் செய்யப்படுகிறது. வழக்கமாக ரூ.1,500 வரை தான் கட்டணம் இருந்து வரும் நிலையில் தற்போது 3 மடங்கு உயர்ந்துள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே சென்னையில் வசித்து வரும் பலரும் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள். பலரும் ஒரே நேரத்தில் சொந்த ஊர் செல்ல முனைவதால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

பஸ், ரயில்களில் டிக்கெட்
என்ன தான் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்ட நெரிசலோடே சொந்த ஊர் சென்று வருவதை பார்க்க முடிகின்றது. பஸ் மற்றும் ரயில்களில் ஏற்கனவே புக்கிங் செய்யும் வசதி இருந்தாலும் அதுவும் மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்து விடுகிறது.
இதனால் பயணிகளுக்கு கடைசி வாய்ப்பாக ஆம்னி பஸ்களே இருந்து வருகிறது. ஆனால் ஆம்னி பஸ்களும் இந்த நேரத்தில் கட்டணங்களை பல மடங்கு உயர்ந்தி விடுகின்றன. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என பண்டிகை நாட்கள் வந்தாலே அதிக அளவு மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை காரணம் காட்டி, ஆம்னி பஸ் கட்டணமும் பல மடங்காக உயர்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
ஆம்னி பஸ் கட்டணம்
தற்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு பள்ளி விடுமுறையை முன்னிட்டு பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகிறார்கள். புத்தாண்டு பண்டிகையும் வருவதால் சென்னையில் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களான மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் குமரி என தென் மாவட்டங்களுக்கு குடும்பத்தோடு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.
வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தற்போதே ஆம்னி பஸ்களில் கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை அன்றும் அதிகம் பேர் சொந்த ஊர் புறப்படுவார்கள் என்பதால், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.4,500 வரை கட்டணம் வசூல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4,500 வரை வசூல்
சாதாரண நாட்களில் நெல்லை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்ல ரூ.800 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல ரூ.4 ஆயிரத்து 300 வரை வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு ரூ.2 ஆயிரத்து 500 வரை வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னையில் இருந்து சேலத்திற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் இது குறித்து போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு சார்பிலும் சிறப்பு பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் டிசம்பர் 23, 24 ஆம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், கோயம்பேட்டில் இருந்து வரும் 23, 24 ஆம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாதவரத்தில் இருந்து வரும் 23, 24 ஆம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications