இனி கேரளாவுக்கு ஆம்னி பஸ் செல்லாது.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேருந்துகளுக்கு அம்மாநில அரசு போக்குவரத்துத்துறை ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்து பயனிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரளா போக்குவரத்துத் துறை, தமிழகத்தைச் சேர்ந்த 30 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பயணிகளையும் நடு வழியிலேயே கேரளா அதிகாரிகள் இறக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரளா அரசை கண்டித்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு முதல் தமிழ்நாடு - கேரளா இடையில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவித்திருக்கின்றனர். திடீரென ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வார விடுமுறை நாளில் சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான தயாராகி இருப்பர். கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கோவை, சென்னை உள்ளிட்ட கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அதேபோல் இளைஞர்கள் பலரும் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். இன்னொரு பக்கம் இன்னும் சில நாட்களில் சபரி மலை சீசன் தொடங்க உள்ளது.
இப்படியான நேரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு - கேரளா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications