ஆம்னி பேருந்துகள் vs அரசு.. கிளாம்பாக்கம் பற்றி குழப்பத்தில் பயணிகள்.. கோயம்பேட்டில் என்ன நடக்கிறது?
சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தற்போது 1000 ஆம்னி பேருந்துகள் இருக்கும் நிலையில் அவற்றை அப்படியே எப்படி கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியும் என்று ஓட்டுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 2 லட்சம் பேர் புக்கிங் செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறி உரிமையாளர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
சென்னையை அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.இங்கு தான் தற்போது அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு வரை சென்று வருகின்றன. இதனால் சென்னை வாழ் மக்களின் முதல் தேர்வாக ஆம்னி பேருந்துகள் உள்ளன.

பலரும் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யவே விரும்புகிறார்கள். பேருந்தில் இறங்கி அப்படியே வீட்டிற்கு போக முடியும், மேலும் எளிதாக வீட்டில் இருந்து கிளம்பி அப்படியே ஏறி சொந்த ஊர் போக முடியும் என்பதால் சென்னை பயணிகள் ஆம்னி பேருந்துகளையே விரும்புகிறார்கள்.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளை ஜனவரி 24ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கி கொள்ள அனுமதித்திருந்தது. இதனிடையே கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கும், பஸ்களை நிறுத்தவும் போதிய வசதிகள் செய்து தரும் வரையில், கோயம்பேட்டில் இருந்து தான் புறப்படுவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்தனர். ஆனால் அரசோ ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இன்று இரவு முதல் இயக்க தடை விதித்துள்ளது. கண்டிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது.

அமைச்சர் சிவசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
ஏனெனில், அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்பதுதான் எங்களது அன்பான வேண்டுகோள். இம்மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆனால் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது என்று பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சருமான சேகர்பாபு இன்று காலை செய்தியாளர்களிடம் பேசும் போது, கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல் அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப மட்டும் தான் இந்த அரசு செயல்பட முடியும். ஏற்கெனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, போக்குவரத்து துறை செயலாளர், சிஎம்டிஏ வீட்டு வசதித் துறை செயலாளர், உறுப்பினர் செயலர், போன்றோர்களோடு கலந்தாலோசித்து ஆம்னி பஸ் உரிமையாளர்களோடு கூட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
அந்தக் கூட்டத்திலேயே கடந்த மாதம் 30-ந் தேதி பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டவுடன் படிப்படியாக ஆம்னி பஸ்களை இயக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் கால அவகாசம் கேட்டதற்கிணங்க ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் நாங்கள் அங்கே ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று கூறியிருந்தார்கள். இப்பொழுது திடீரென்று அவர்களே ஒத்துக் கொண்டதற்கு மாறாக இயக்ககுவதற்கு தயாராக இல்லை என்று கூறுகிறார்கள்.
அரசு அவர்களுடைய விருப்பம் போல் செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்றார்போல் தான் அரசு செயல்பட முடியாது. ஆகவே இன்றிலிருந்து ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பஸ்கள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், பயணிகளுக்கு தேவையான வசதிகளையும், பேருந்துகளுக்கு தேவையான வசதிகளையும் முழுமையாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், போக்குவரத்து துறையும் செய்து கொடுத்து இருக்கிறோம்.
எனவே ஒத்து கொண்டதைப்போல் ஆம்னி பேருந்துகளை கிளம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் வைத்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தந்திருக்கிறோம்" இவ்வாறு சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஆனால் அமைச்சர் சேகர்பாபுவின் கோரிக்கையை ஏற்கவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் எச்சரிக்கை விடுத்துள்ள போக்குவரத்து ஆணையர், இன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி இறக்கினால் கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கையையும் ஏற்க மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டமிட்டபடி கோயம்பேட்டில் இருந்து மட்டுமே பேருந்தை இயக்குவோம் என்று அறிவித்துள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், "கடந்த 22ம் தேதி இரவு திடீரென ஆம்னி பேருந்து நிலையத்தை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். திடீரென பேருந்து நிலையத்தை எப்படி காலி செய்ய முடியும். அரசு இரண்டு நாட்களாக ஏன் தீவிர நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.. இன்றைக்கு 60000 பயணிகள் புக்கிங் செய்திருந்தனர். இந்த தொடர் விடுமுறைக்கு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதில் நிறைய பாதிக்கப்படப்போவது பயணிகள் தான்..
எனவே தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பயணிகள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். மேலும் 1000 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை என்று குற்றம்சாட்டும் பஸ் உரிமையாளர்கள், 144 பேருந்துகளே கிளாம்பாக்கத்தில் நிறுத்த முடியும் என்றும் எனவே கண்டிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்தே புறப்படுவோம் என்று கூறினார்கள். மேலும் வழக்கு போட்டால் நீதிமன்றம் செல்வதை தவிர வேறுவழி இல்லை என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறினார்கள். இதனிடையே சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கோயம்பேட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications