தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்கள் எப்போது இயக்கப்படும்?.. குட் நியூஸ் சொன்ன ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர்
சென்னை: தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு, தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கியுள்ளன.
இதேபோல் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளும் சென்னையில் இருந்து நெல்லை,மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்கள் எப்போது ஓடும்? என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்து எழுந்து வரத் தொடங்கின.

இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:- ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர் குடும்பத்தினர் மிக கடுமையாக வருவாய் இழந்துள்ளனர். அன்றாட வாழ்வை கூட மேற்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.
எனவே எங்களது இக்கட்டான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டு வரி விலக்கு பெரும் வகையில் பஸ்களை இயக்கப்போவதில்லை என்று போக்குவரத்து துறைக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஜூன் மாதம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் இருந்தால்தான் வரிவிலக்கை பெற முடியும்.
எனவே தற்போது ஆம்னி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனாலும் ஒருசில பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும். அனைத்து பஸ்களும் முழுமையாக ஜூலை 1-ந் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்பழகன் தெரிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பஸ்களின் பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications