சுதந்திர தின நன்னாளில் ஜனநாயகத்தை காக்க உறுதியேற்போம் - நெல்லை முபாரக் வாழ்த்து
சென்னை : நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையும், மக்களாட்சி ஜனநாயகத்தையும் காக்க, சுதந்திர தின நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து 76வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கும் இப்பொன்னாளில் (ஆக.15), நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரத் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்
பிரிட்டீஷ் அடிமை ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டு, நாட்டு மக்களும் வருங்கால சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசித்திட, தங்களுடைய விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த அந்த உன்னதமான ஆத்மாக்களை போற்றி அவர்களை நாம் நினைவுகூர்வோம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களால் நிலைநிறுத்தப்பட்ட, அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கிய இந்தியா என்ற எண்ணத்தின் மீது பாசிச கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில், பிரிட்டிஷ் அடிமை ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் குறிக்கும் பவள விழாவினை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

தலைவர்களின் கனவுகள் தகர்ப்பு
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு விடுதலை பெற்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதும், விடுதலைக்குப் பிந்திய இந்தியா தனது நோக்கங்களில் இருந்து மெதுவாக பின்நோக்கிச் செல்வது கவலையளிக்கிறது. சுதந்திரத்துக்கு பிறகான தற்போதைய இந்தியா தன்னை வடிவமைத்த தலைவர்களின் கனவுகளை தகர்த்து வருகிறது.

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு
சுதந்திர இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் ஆழமான சாதனைகளில் ஒன்று அதன் அரசியலமைப்பு மற்றும் ஒரு ஜனநாயக நாடாக இந்தியாவைக் கொண்டிருக்கும் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் ஆகும். அது சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம், அந்தஸ்து, வாய்ப்பின் சமத்துவம், சகோதரத்துவத்தை மேம்படுத்துதல், தனிமனிதனின் கண்ணியம், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. மட்டுமின்றி, சுதந்திரமின்மை, சமத்துவமின்மை, பாகுபாடு, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் உருவகமாக இருந்த பழைய அடிமை சமூகத்தை மாற்றி புதிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியங்களை அது கொண்டுள்ளது.
மொழி, பிராந்தியம், மதம், சாதி மற்றும் பழங்குடியின் பன்முகத்தன்மையால் இந்தியா அடையாளப்படுத்தப்படுகிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு சிறந்த முறையில் இடமளிக்க முயற்சித்துள்ளது. அதேபோல், மத சிறுபான்மையினரின் அடையாளத்தையும் நலனையும் பாதுகாப்பதற்கான பாதுகாப்புகளுக்கும் அதில் இடமளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

பாசிச ஆட்சியாளர்கள் நடவடிக்கைகள்
ஆனால், நீண்ட காலத்திற்கு நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் வகையில், அரசமைப்பின் உன்னத அம்சங்களையும் நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தற்போதைய பாசிச ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தேசத்துரோகம், ஆயுதப்படை சட்டம், யு.ஏ.பி.ஏ., தேசபாதுகாப்பு சட்டம் போன்ற பிரிட்டீஷ் அடிமைகால கொடூரமான சட்டங்கள் மூலம், சாதாரண குடிமக்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் எதிரான கண்மூடித்தனமான துஷ்பிரயோகங்கள் சுதந்திர இந்தியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க கறைகளில் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய சட்டங்களின் அடக்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது துரதிஷ்டவசமாக செங்குத்தாக உயர்ந்துள்ளது.

வன்முறைகள் அதிகரிப்பு
சிறுபான்மையினர், பெண்கள், பட்டியலிடப்பட்ட சமூகங்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன. மேலும் அவர்கள் மீதான தனது கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பிலும் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்கள் உட்பட, உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் பின் இருக்கைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகள் பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
பறிபோகும் உரிமைகள்
சிவில் சமூக அமைப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது. குறிப்பாக சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் பொருளாதார, கலாச்சார மற்றும் மத உரிமைகளை வலியுறுத்துவதிலும், வெளிப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கின்றன.

கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம்
மதச்சார்பின்மை, மக்களாட்சி, சமத்துவம், சமநீதி அனைத்தையும் பலவீனப்படுத்தி விட்டு, ஊழல், மதவாதம் மற்றும் நவீன கார்ப்பரேட் முதலாளித்துவம் பலம்பெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் சர்வாதிகார போக்கால் நாடு கார்ப்பரேட்டுகளின் அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. தொழிலாளர்கள் தங்களின் உரிமையை கேட்கும் அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். கார்ப்பரேட் முதலைகளாலும், மதவெறுப்பை நோக்கமாகக் கொண்ட போலியான தேசியவாதம் பேசும் பாசிசவாதிகளாலும் இந்திய நாட்டின் மக்களாட்சி கருத்தாக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றது.
Recommended Video

ஜனநாயகத்தை பாதுகாப்போம்
இந்தியா இன்று எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானது, நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையும், மக்களாட்சி ஜனநாயகத்தையும் பாதுகாப்பதாகும். ஆகவே, அதனை பாதுகாக்க நாம் இந்த நாளில் உறுதியேற்போம். அரசமைப்பு நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையையும், அதிகாரவர்க்கத்தின் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையையும் மீட்டெடுக்க வேண்டியதும் நாட்டு மக்கள் அனைவரின் பொறுப்பாகும். மேலும், உண்மையான ஜனநாயகம் தளைத்திடவும், முன்னோர்கள் உருவாக்கித் தந்த அரசமைப்பின் விழுமியங்களையும், அவர்கள் கட்டியெழுப்பிய பன்முகத் தன்மையை பேணிக்காப்பதும் நமது கடமையாகும் என அந்த அறிக்கையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications