நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி! 14ஆம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தும் வேல்முருகன்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளுடன் வேல்முருகன் வரும் 14ஆம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.
அதேபோல் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் கிராமங்கள் வரை கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கவுள்ளார். இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகாம் பரபரப்பாக காணப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் முன்கூட்டியே அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் வேல்முருகனும் தனது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார் படுத்தும் பணிகளை தொடங்கிவிட்டார்.
திமுக கூட்டணியில் வேல்முருகன் இருந்தாலும் கூட சமீபகாலமாக கூட்டணிக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக சீறத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு, என பல விவகாரங்களில் திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் வேல்முருகன்.

அதேபோல் சட்டமன்ற வளாகத்தில் ஒருமுறை பேட்டியளித்த போது கூட திமுக மற்றும் சபாநாயகருக்கு எதிராக ஆவேசம் காட்டினார். இதனால் வேல்முருகன் திமுக கூட்டணியில் நீடிப்பாரா என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.
வரும் 14ஆம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர்களிடம் கலந்துரையாடும் வேல்முருகன், மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உரிய மரியாதை தருகிறார்களா என்பது குறித்து கேட்டறிவார் எனத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகள் கருத்தை அறிந்து வேல்முருகன் முக்கிய முடிவு எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications