அமைச்சர் அன்பில் மகேஷ் பிறந்தநாள்! 10 கிலோ சாக்லேட் மாலை அணிவித்த திமுக நிர்வாகிகள்!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை ஒட்டி, சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் 10 கிலோ சாக்லேட் மாலை அணிவித்து கவனம் ஈர்த்துள்ளனர்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பிறந்தநாளை ஒட்டி அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காக தமிழகமெங்குமிருந்து திமுக இளைஞரணி நிர்வாகிகளும், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் காலையிலேயே குவிந்துவிட்டனர்.

பொன்னாடை, பழக்கூடை, உலர் பழ வகைகள், புத்தகம், பூச்செண்டு, என அவரவர் வசதிக்கேற்ப அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பிறந்தநாள் பரிசுகள் வழங்கினர். கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்துப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றூண்டி வழங்கினார். சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் திரளானோர் வந்திருந்தனர்.
மீண்டும் மாலையும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றுக்கொள்ளும் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளிடம் பிறந்தநாள் வாழ்த்து பெறுகிறார். இதனிடையே சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி வினோத் ஆகியோர் 10 கிலோ எடையில் சாக்லேட் மாலை அணிவித்து கவனம் ஈர்த்தனர்.
அதேபோல் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் மதியம் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரும் தனது நண்பருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தனது குடும்பத்தினரின் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார் அன்பில் மகேஷ்.












Click it and Unblock the Notifications