Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருடல்.. விசாரணையின் போக்கே மாறுமே? என்ன உள்நோக்கம்?- கள்ளக்குறிச்சி வழக்கில் சீமான் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மரணம் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் கூறிய கருத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இப்போதே வழக்கின் இறுதித் தீர்ப்பு முடிவை உயர் நீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் இது விசாரணையின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்துவிடும் அபாயமுண்டு என எச்சரித்துள்ளார் சீமான்.

நீதிமன்றம் இறுதி முடிவு

நீதிமன்றம் இறுதி முடிவு

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் தொடர்பான வழக்கின்போது, மாணவியின் மரணம் கொலையல்ல; தற்கொலை எனக் கூறி, வழக்கின் இறுதி முடிவை இப்போதே உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வழக்கின் விசாரணையே இன்னும் முழுமையடையாத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, வழக்கின் இறுதி நிலை குறித்த முடிவுக்கு உயர் நீதிமன்றம் எதன் அடிப்படையில் வந்தது?

 ஏன் இந்த அவசரம்

ஏன் இந்த அவசரம்

இவ்வாறு அறிவிக்க சட்டத்திலேயே இடமில்லாதபோது ஏன் உயர் நீதிமன்றம் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? என்பது புரியாத புதிராக உள்ளது. பொதுவாக ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களது தரப்பிலிருந்து ஜாமீன் கோரப்பட்டால், தொடர்புடையவர்களைப் பிணையில் வெளியே விட்டால், அது வழக்கின் விசாரணையைப் பாதிக்குமா? சாட்சியங்களும், ஆவணங்களும் அவர்களால் கலைக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? பிணையில் வெளியே சென்றால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிற்கு அச்சுறுத்தலோ, நெருக்கடியோ தரப்படுமா?

 நீதித்துறை விதிமீறல்

நீதித்துறை விதிமீறல்

குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவார்களா? என்பதுபோன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்தே, பிணை தொடர்பான முடிவுகள் நீதிமன்றங்களினால் எடுக்கப்பட்டு வருகிறது. பிணை தொடர்பான முடிவெடுக்கப் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளாக இதனைத்தான் வகுத்து அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 2004ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சமன்லால் எதிர் உத்திர பிரதேச அரசு வழக்குத் தீர்ப்பில் இவற்றைத் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மற்றபடி, வழக்கின் தகுதி நிலை குறித்தெல்லாம் அறிவிக்கக்கூடாது எனும் விதிமுறைக்கு மாறாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாவரும் குற்றமற்றவர்கள் என்றும், மாணவியின் மரணம் தற்கொலை தான் என்றும் உயர் நீதிமன்றம் கூறியிருப்பது அப்பட்டமான நீதித்துறை விதிமீறலாகும்.

 நெருடல்

நெருடல்

காவல்துறை தரப்பு தற்கொலை என்ற கோணத்திலேயே விசாரணையைக் கொண்டுசெல்வதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, குற்றஞ் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என உயர் நீதிமன்றம் அறிவிப்பதுமான செயல்பாடுகள் பெரும் முரணாகவும், நெருடலாகவும் இருக்கிறது. மாணவி மரணம் தொடர்பான வழக்கை, தற்கொலை எனக் கூறி முடித்துவிடுவதற்கு ஆளும் வர்க்கம் காட்டும் அதீத முனைப்பும், கருத்துருவாக்கமும்தான் பெரும் ஐயத்தை விளைவிக்கிறது.

விசாரணையின் போக்கே மாறும்

விசாரணையின் போக்கே மாறும்

இப்போதே வழக்கின் இறுதித் தீர்ப்பு முடிவை உயர் நீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் இது விசாரணையின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்துவிடும் அபாயமுண்டு. அதனை உள்நோக்கமாகக் கொண்டுதான் இத்தகைய கருத்துகள் உதிர்க்கப்பட்டனவா? எனும் கேள்வி எழுவதை முற்றாய் தவிர்க்க முடியவில்லை. எப்படி நோக்கினாலும், உயர் நீதிமன்றத்தின் இத்தகைய செயல்பாடும், முன்கூட்டிய அறிவிப்பும் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இது சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு எதிராகக் கொடுக்கப்படும் மறைமுக அரசியல் அழுத்தமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிட முடியாது.

மேல்முறையீடு செய்ய வேண்டும்

மேல்முறையீடு செய்ய வேண்டும்

இத்தோடு, பெரும் செல்வாக்கும், அரசியல் பின்புலமும் கொண்டவர்களாக அறியப்படும் பள்ளியின் நிர்வாகத்தினர் பிணையில் வெளியே வருவது என்பது விசாரணைக்கு இடையூறாக அமையும் வாய்ப்பும் உண்டு. ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டு, மாணவி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீனுக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+