விஜயகாந்தின் சாப்பாடு பாத்திரங்களை கழுவ பெரிய போட்டியே நடக்குமாம்! மதுரை ரைஸ் மில் கால சுவாரஸ்யம்!
சென்னை: மதுரையில் தனது தந்தையின் ரைஸ் மில்லை கவனித்துக்கொண்ட காலத்தில் விஜயகாந்தின் சாப்பாடு பாத்திரங்களை கழுவுவதற்கு அங்கிருக்கும் தொழிலாளர்கள் இடையே பெரிய போட்டியே நடக்குமாம்.
சின்ன முதலாளி என்ற பெயருடன் தந்தை நடத்தி வந்த ரைஸ் மில்லை விஜயகாந்த் பார்த்துக்கொண்ட காலத்தில் அவருக்கு மதிய சாப்பாடு வீட்டில் இருந்து தான் வரும். நான் வெஜ் உணவுகளை விரும்பி சாப்பிடக் கூடிய விஜயகாந்துக்கு, வீட்டிலிருந்து மீன், மட்டன், என ஸ்பெஷல் உணவு வகைகள் கொடுத்தனுப்பபடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அதனை அப்படியே சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை வெறுமனே போடாமல், கொஞ்சத்தை மட்டும் தட்டில் கொட்டி சாப்பிட்டுவிட்டு மீத உணவை அப்படியே வைத்துவிடுவாராம் விஜயகாந்த்.

அதேபோல் வீட்டிலிருந்து தினமும் தனக்கு அளவாக சாப்பாடு கொடுத்தனுப்புமாறும் கூறமாட்டாராம் அவர். இரண்டு மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு அந்தக் காலத்திலேயே ரைஸ் மில்லுக்கு சாப்பாடு கொடுத்தனுப்பச் சொல்லி தனது மில்லில் வேலை பார்ப்போரும் அந்த உணவை சாப்பிடும் வகையில் பார்த்துக்கொண்டவர் விஜயகாந்த். இதனால் தான் சின்ன முதலாளியின் சாப்பாடு பாத்திரங்களை நான் கழுவுகிறேன் என மில் தொழிலாளர்கள் போட்டி போட்டு விஜயகாந்தின் சாப்பாடு பாத்திரங்களை கழுவியிருக்கிறார்கள்.
விஜயகாந்துக்கு பசி இருந்தாலும் அரை வயிற்றுக்கு மட்டும் சாபிட்டுவிட்டு, தன்னால் சாப்பிடமுடியவில்லை எனக் கூறி மீத உணவை தனது மில் தொழிலாளர்களுக்காகவே பாத்திரத்தை அப்படியே வைத்துவிடுவாராம். அதனை மூன்றரை மணியளவில் தொழிலாளர்கள் சாப்பிடுவார்களாம். இந்த நிகழ்வு தான் பசியின் தாக்கத்தை விஜயகாந்துக்கு உணர்த்தியிருக்கிறது. தாம் வசதி வாய்ப்புக்கு குறைவில்லாமல் பிறந்து வளர்ந்திருந்தாலும் எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கு இப்படி கஷ்டப்படுகிறார்களே என சிந்திக்க வைத்திருக்கிறது.
மனிதர்களுக்கு பணம், பொருள் உள்ளிட்ட எது கொடுத்தாலும் போதும் என்று சொல்ல மனம் வராது, ஆனால் சாப்பாடு மட்டுமே வயிறு நிறைந்தால் போதும் போதும் எனச் சொல்ல மனிதர்களுக்கு மனம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்து தான் விஜயகாந்த் சாப்பாடு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications