நீளும் கைது லிஸ்ட்..ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது? பக்கத்து வீட்டில் பதுங்கிய பிரதீப்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் உறவினர் எனக் கூறப்படும் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், அதிமுக நிர்வாகியான மலர்கொடி, தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக நிர்வாகியான அஞ்சலை, அதிமுக கவுன்சிலரான ஹரிதரன், வழக்கறிஞர் மாத்தூர் சிவா உள்ளிட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படும் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையிஒல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் பிரதீப் கொலையான ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டு அருகே வசித்தவர் எனக் கூறப்படுகிறது.
கொலை தொடர்பாக ஏற்கனவே இரண்டு நாட்களாக பிரதீப்பை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். தற்போது புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில் மேலும் பல கைது சம்பவங்கள் அரங்கேறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் காவல்துறையினர். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மேலும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications