ஆன்லைன் ரம்மி விவகாரம்: உதகையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி..சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கைது
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரின் செயலை கண்டித்து உதகையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற சிபிஐ, சிபிஎம் கட்சியினரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், ஆளுநரின் செயலை கண்டித்து இன்று காலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற சிபிஐ, சிபிஎம் கட்சியினரை காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பலர், பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கத் தொடங்கின. இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, அக்டோபர் 19ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி திடீரென தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆளுநர் ஆா்என் ரவி விளக்கம்
மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் ஆா்.என்.ரவி விளக்கம் அளித்து இருந்தார். அதில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆளுநரின் செயலை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது 5 நாள் பயணமாக நீலகிரி சென்றுள்ளார். எனவே, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையை சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் முற்றுகையிட முயன்றன. அப்போது அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications