இன்னும் 15 வருஷம்தான் ஆக்டிவ் அரசியல்.. ’சீக்ரெட்’ என்ன? திருமா உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக கட்சி கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள நிலையில், அதே அளவுக்கு அக்கட்சிக்குள் பல குழப்பங்களும் அதிகரித்துள்ளன. திமுக கூட்டணிக்குள் கடந்த 2024 மக்களவைத் தேர்தல் வரை எந்த ஒரு சின்ன சலசலப்பும் இல்லாமல்தான் இருந்தது. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கூட்டணிக்குள் முதல் குழப்பத்தை உண்டாக்கியது காங்கிரஸ். தொகுதிப் பங்கீடு என்பதைத் தாண்டி, அதிகாரப் பகிர்வு என ஒரு புதிய கோரிக்கையைக் காங்கிரஸ் தலைமை மறைமுகமாக முன்வைத்தது.

இதனால் காங்கிரஸ், திமுக இடையே ஒரு சின்ன மனத்தாங்கல் ஏற்பட்டது. மனக்கசப்புடன் இறுதியாக திமுக கூட்டணியில் தொடர்வோம் என்பதைக் காங்கிரஸ் உறுதிசெய்தது. தொகுதி பகிர்வு முடிந்தும் இன்னும் தொல்லை தரும் விஷயமாக உள்ளது ராகுல் காந்தியின் மவுனம். அவர் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் காலதாமதம் நிலவுவது ஒரு பின்னடைவாகக் கூறப்படுகிறது.

Only 15 More Years in Active Politics What is the VCK Chief Thirumavalavan s Secret

ஆயினும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை ஒருங்கிணைத்துச் செல்வதில் திறமையானவர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார். அனுபவம் மிக்க அரசியல் தலைவரான அவர், விசிகவுக்கு தொகுதிப் பங்கீடு செய்வதில் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்று பட்டியலின அரசியல் ஆதரவாளர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

காங்கிரசைப் போலப் பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் விசிக ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக அங்கம் வகித்து வருகிறது. பல ஆண்டுகளாக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அக்கட்சியைக் காட்டிலும், திடீரென்று கூட்டணிக்குள் வந்த தேமுதிகவுக்கு அதிக இடங்களை திமுக கொடுத்துவிட்டதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

விசிகவைவிட தேமுதிக பெரிய கட்சியாக இருந்துள்ளது. அது எதிர்க்கட்சியாக அமர்ந்த கட்சி. விஜயகாந்த் மறைவுக்குப் பின் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவு உள்ளதுதான். அதற்காக தேமுதிகவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதற்கு மாநிலம் தழுவிய ஓர் ஆதரவு உள்ளது என்கிறார்கள் அரசியல் வியூகர்கள்.

அப்படி இருந்தும் உரிய தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னர், விசிகவுக்குள் ஏற்பட்ட தடுமாற்றம் தீர்ந்தபாடில்லை. திருமாவளவன் பொதுவெளியில் செல்வாக்கு உள்ள சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காதது பெரிய சர்ச்சையை உண்டாகியது. அதை விளக்கிப் பேசிய திருமா, தான் எடுத்த முடிவு தவறானதாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். ஒரு தலைவராக அவர் தவறான முடிவை எடுப்பார் என அவரது தொண்டர்கள் கருதமாட்டார்கள். சரியான முடிவே கட்சியை அதிகாரம் நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், ஏதோ ஒரு தடுமாற்றம் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் உண்டானது.

அவரே காட்டுமன்னார்கோவில் தொகுதியில் களம் காணப்போவதாக அறிவித்தார். அவர் தற்சமயம் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இன்னும் பதவிக் காலம் 4 ஆண்டுகள் உள்ளன. தேவையில்லாமல் ஒரு இடைத்தேர்தலை ஏன் அந்தத் தொகுதி மக்கள் மீது திணிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இத்தனை குழப்பங்களுக்கும் இப்போது திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு இப்போது 63 வயதாகிறது. இன்னும் 15 ஆண்டுகள் மிகத் தீவிரமாக அரசியல் களத்தில் என்னால் இயங்க முடியும் என நம்புகிறேன். எனவே மாநில அரசியலுக்குத் திரும்பலாம் என நினைத்தேன். அந்த முடிவை சக நிர்வாகிகளோடு கலந்தாலோசிக்கவில்லை. நானே செய்த முடிவுதான்.

ஆனால், நான் சட்டசபைத் தேர்தல் போட்டியிடப்போவதாக அறிவித்ததும் எதிர்க்கட்சிகள், தொங்கு சபை உண்டாக வாய்ப்புள்ளது என்றும் அதை வைத்து நான் துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவியைப் பெறத் திட்டம் போடுவதாகக் கதைகட்டி விட்டனர். அந்த விமர்சனங்கள் என் மனதை மிக ஆழமாகப் பாதித்தன. எனவேதான் என் முடிவை மாற்றிக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தற்போது மக்களவையில் பாஜகவுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் ஒரே தலித் குரல் தான் மட்டுமே என்றும் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் அந்தக் குரல் நின்றுபோய்விடும் என்றும் வடநாட்டுத் தலைவர்கள் அழைத்து ஆலோசனை தந்ததாகவும் அதுவும் தனது மன மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் ஆரம்பித்துள்ள தவெக பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கக் கூடும் என்ற வாதம் தேர்தல் வியூக வகுப்பார்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள திருமாவளவன், "விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறுவதைவிட அவர் குடைச்சல் தருபவராகவே இருப்பார். அவர் பின்னர் பட்டியலின மக்களின் வாக்கும் சிறுபான்மை மக்களின் வாக்கும் செல்லும் என்பது ஒரு கட்டுக்கதைதான். அதில் உண்மை இல்லை" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக இந்தத் தேர்தலில் குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் அக்கட்சியை பாஜக சிதைத்துவிடும் என்றும் வரும் 2029 தேர்தலில் திமுக Vs பாஜக என்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைக்க முயற்சிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

விசிகவுக்குள் கட்சியைச் சேராத நபருக்குச் சீட்டு அளித்த விவகாரம் பற்றி மனம் திறந்த அவர், இளையபெருமாள் வாரிசை கௌரவப்படுத்த வேண்டும் என்பதால் ஜோதி மணியை நிறுத்தினோம். அவரைத் தவிரக் கட்சிக்குள் வேறு நபருக்குச் சீட்டு வழங்கப்பட்டிருந்தால் அது பல குழப்பங்களுக்கு வழி வகுத்திருக்கும் என்றும் அவர் வெளிப்படையாக உன்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

- கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+