வெறும் ரூ.1,000 கோடி ஊழல்தானா? திமுகவை காப்பாற்றுவதே பாஜகதான்- 'டாஸ்மாக்' விவகாரத்தில் சீமான் பகீர்!
சென்னை: தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் ரூ.1000 கோடிகள் ஊழல் என்று அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
ரூ.1 லட்சம் கோடி ஊழல்

ஒரு இலட்சம் கோடிகளுக்கும் மேல் இமாலய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில், பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசைக் காப்பாற்றும் நோக்கில் 1000 கோடிகள் என குறைத்துக்கூறி விசாரணையைச் சுருக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.
டாஸ்மாக்கின் ஒவ்வொரு நிலையிலும் ஊழல்
அரசு மதுபானக்கடை சில்லறை விற்பனையில் போத்தலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்தது தொடங்கி, மதுபான கொள்முதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, டாஸ்மாக் வாகன போக்குவரத்து உரிமம், மதுபானக்கூட உரிமம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் என பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. அதைத்தவிர டாஸ்மாக் மதுபான விற்பனையில் 50% மேல் கணக்கில் காட்டப்படாமல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திமுக அரசின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான பழனிவேல் தியாகராஜன் ஆங்கில நாளிதழ் நேர்காணலில் அளித்துள்ள வாக்குமூலமும் திமுக அரசின் மதுபான ஊழலுக்கு மறுக்க முடியாத சான்று பகிர்கிறது.
மதுபான ஊழலை மறைக்கும் நாடகம்
கடந்த 4 ஆண்டுகளாக இல்லாமல் திடீரென திமுக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதும், மக்களவை தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, அனைத்துக்கட்சி கூட்டம் என திமுக அரசு ஆடும் அரசியல் ஆட்டங்கள் அனைத்தும் தன் மீதான பல்லாயிரம் கோடி மதுபான ஊழலை மறைக்க நடத்தும் நாடகமேயாகும்.

டெல்லி, தெலுங்கானா போல தமிழகத்தில் இல்லையே ஏன்?
ஆம் ஆத்மி அரசின் மதுபான ஊழலில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, தெலுங்கானா மாநில மதுபான ஊழலில், ஆட்சியின் அதிகார மையமாக இருந்த அன்றைய முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் அன்புமகள் அம்மையார் கவிதா அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால், 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் விசாரணையை விரிவாக்கி அப்படி எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்?
திமுக அரசுக்கு ஆதரவாக அமலாக்கத்துறை
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில், அம்மாநிலங்களின் துறைசார்ந்த அமைச்சர்கள் முதல் முதலமைச்சர், முதல்வரின் குடும்பத்தினர் வரை ஊழலில் பங்குபெற்ற அனைவரும் பாகுபாடின்றி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் திமுக அரசிற்கு ஆதரவாக அமலாக்கத்துறை தொடர்ச்சியாக செயல்படுவது ஏன்? அப்படியென்றால எதிர்க்கட்சிகள் செய்யும் ஊழல் முறைகேடுகளை அமலாக்கத்துறை மூலம் வெளிப்படுத்துவதை வெறும் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே பாஜக அரசு பயன்படுத்துகிறதா?

திமுக- பாஜக இடையே மறைமுக உறவு
அதனால்தான் திமுக அரசு செய்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை மூலம் குறைத்துக்காட்டி மூடி மறைக்க முயல்கிறதா பாஜக அரசு? திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? முழுமையாக விசாரணை நடத்தாமல் 1000 கோடிகள் மட்டுமே ஊழல் என்று அவசரமாக அறிவித்தது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு என்று அமலாக்கத்துறை அறிக்கை அளித்தது எப்படி? மக்களின் வரிப்பணத்தை மீட்க வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே அமலாக்கத்துறைக்கு இருக்குமாயின், மற்ற மாநில மதுபான ஊழலில் காட்டிய வேகத்தையும், தீவிரத்தையும் திமுக அரசின் மதுபான ஊழல் விசாரணையில் காட்ட தயங்குவது ஏன்? இதன் மூலம் பாஜக - திமுக இடையேயான மறைமுக உறவு மீண்டுமொருமுறை வெளிப்படுகிறது.
இமாலய மதுபான ஊழல்
ஆகவே, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இமாலய மதுபான ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள், உயர் அதிகார மையத்தில் உள்ளவர்கள் வரை அனைவரையும் கைது செய்து விசாரணை வளையத்தை விரிவு செய்து, பாகுபாடற்ற நேர்மையான விசாரணை நடத்தி, பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு நடைபெற்றுள்ள ஊழலை முழுமையாக வெளிப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை முழுவதுமாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications