வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை.. சீமானை கைது செய்வதுதான் ஒரே தீர்வு.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
சீமானை கைது செய்தால் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடக்கும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு ஒரே வழி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்வது மட்டும் தான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்பதால், தமிழ்நாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும் வடமாநில தொழிலாளர்களையே பணியமர்த்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஃபாஸ்ட் புட் கடைகள், டீ கடைகளில் அதிகளவிலான வடமாநில தொழிலாளர்களே பணி செய்து வருகின்றனர்.

வட மாநில தொழிலாளர்கள்
குறிப்பாக கட்டட தொழில்களில் வட மாநில தொழிலாளர்களே அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்புகளை வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அண்மையில் பிரபல யூடியூப் சேனலில் வடமாநில தொழிலாளர்கள் பற்றி வெளியான காணொலி மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டது.

பரவிய வதந்திகள்
அதேபோல் தமிழர்களின் வாய்ப்பையும் வடமாநில மக்கள் ஆக்கிரமிப்பதாகவும் சில அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழ்நாட்டில் கால் பதிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொல்லப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பகிரப்பட்டன.

காவல்துறை நடவடிக்கை
இது தேசிய அளவில் பேசப்பட்ட சூழலில், வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்திகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு தெரிவித்தார். அதேபோல் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி மற்றும் பத்திரிகையாளர்களை கைது செய்யவும் தனிப்படை போலீஸ் விரைந்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து
இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே வழி சீமானை கைது செய்வதுதான் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சீமானை நேரடியாக கைது செய்ய வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளது நாம் தமிழர் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications