ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருத வேண்டாம்.. மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அதிமுகவில் உள்ள 98 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக இருந்தனர். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லை என்பது அவருக்கும் தெரியும் என்கிறார்கள்.
எனினும் அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு நடக்கவே கூடாது என நீதிமன்றத்தை நாடினார். ஆனால் கட்சி உள்விவகாரத்தில் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.

அதிமுக பொதுக் குழு
இதையடுத்து அதிமுக பொதுக் குழு நடைபெற்றது. அங்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ், ஓபிஎஸ் மகன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், குன்னம் ராமசந்திரன் உள்ளிட்டோரை நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் பதவி
ஒருங்கிணைப்பாளர் பதவி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரும் மேற்கண்டவர்களும் நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் மகன் நீக்கம்
ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்தும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி இருந்த நிலையில் தற்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தான் அதிமுக எம்பியா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என ஓபிஆர் கூறியிருந்தார்.

ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பி இல்லை
இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கையில் தேனி எம்பியாக உள்ளவரும் ஓபிஎஸ் மகனுமான ஓ பி ரவீந்திரநாத்தை அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டோம். எனவே கட்சியிலிருந்து நீக்கியதால் அவர் அதிமுக எம்பி இல்லை. அவரை அதிமுக எம்பியாக கருத வேண்டாம் என அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஓபி ரவீந்திரநாத் பதில் கடிதம்
இதையடுத்து இதற்கு பதில் கடிதத்தை ஓ. பி. ரவீந்திரநாத் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்துள்ளார். அதில் தன்னை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது. அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை நிராகரித்துவிடுமாறு குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் வகித்து வந்த சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு அவருககு பதிலாக ஆர் பி உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு முன்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications