பிப்.24-ம் தேதி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா... யார் திறந்து வைப்பது?
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை அவரது பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தை யாரை வைத்து திறந்துவைக்கலாம் என்ற பேச்சு அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாக உள்ளது.
பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்து ஜெ.நினைவிடத்தை திறக்கலாம் அதிமுக தலைமை காய் நகர்த்திய நிலையில் அதற்கு அவர்கள் இருவருமே பிடிகொடுக்கவில்லையாம்.

பிப்.24-ம் தேதி
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினாவில் அவருக்கு பிரம்மாண்ட நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களை ஆளாக்கிய தலைவிக்கு பார்த்து பார்த்து நினைவிடம் அமைத்துள்ளனர்.

விவாதம்
ஜெயலலிதா நினைவிடத்தை பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரில் யாராவது ஒருவரை அழைத்து திறக்க வேண்டும் என்பது அதிமுக தலைமையின் விருப்பமாம். ஆனால் இந்த விருப்பத்துக்கு டெல்லியில் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லையாம். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவர்கள் பிடிகொடுக்கவில்லையாம்.

சந்திப்பு
மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெ. நினைவிடத்தை பிரதமர் அல்லது நீங்க திறந்து வைக்கவேண்டும் என அமித்ஷாவிடம் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அமித்ஷாவிடம் இருந்து புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்ததாம். மற்றபடி எந்த ஒரு உறுதியும் அவர் அளிக்கவில்லையாம்.

துணை ஜனாதிபதி
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரிடம் தோழமை பாராட்டிய பாஜக முக்கியத் தலைவர்களில் அருண் ஜேட்லியும், வெங்கையா நாயுடுவும் முக்கியமானவர்கள். அதில் ஒருவர் மறைந்துவிட்டார், ஒருவர் துணை ஜனாதிபதியாக இருக்கிறார். இதனிடையே வெங்கையா நாயுடுவை அழைத்து வந்து ஜெ. நினைவிடத்தை திறக்கும் எண்ணமும் அதிமுக தலைமைக்கு உள்ளதாம்.











Click it and Unblock the Notifications