ஈரானில் இருந்து ஒரே ஒரு பெண்.. ஆப்கான் தொடங்கி ஜிம்பாப்வே வரை 186 நாடுகளின் கலர்ஃபுல் அணிவகுப்பு!
சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா அணிவகுப்பில் 186 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். ஈரான் நாட்டின் சார்பில் இந்த கொடி அணிவகுப்பில் ஒரே ஒரு வீராங்கனை மட்டும் பங்கேற்றார்.
Recommended Video
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் 186 நாடுகளின் வீரர் வீராங்கனைகள் அணிவகுப்பு நடந்து முடிந்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

186 நாடுகளில் இருந்து
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர். 186 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.

நேரு உள்விளையாட்டு அரங்கில்
செஸ் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இன்று மதியம் முதல் 87 பேருந்துகளில் மாமல்லபுரத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகரில் 8 இடங்களில் தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் அடையாறு ஹெலிபேட் தளம் சென்று அங்கிருந்து காரில் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். இதற்காக சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பைப் பார்வையிட்ட ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையணிந்து அமர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை முதல்வர் புன்னகைத்தபடி மகிழ்ச்சியாகப் பார்வையிட்டார்.

பிரமாண்ட அணிவகுப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள 186 நாட்டு வீரர் வீராங்கனைகளும் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுத்தனர். வீரர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் பெருமிதத்தோடு அணிவகுப்பில் கலந்துகொண்டபோது, அரங்கத்தில் அந்தந்த நாடுகளின் கொடிகள் ஜொலித்தன. ஒவ்வொரு நாட்டு வீரர்களையும் நாடுகளின் பெயர்களோடு பதாகை தாங்கிய தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் வழிநடத்திச் சென்றனர்.

ஒரே ஒருவர்
செஸ் ஒலிம்பியாட் வீரர்களின் அணிவகுப்பில் ஆஃப்கானிஸ்தான் முதல் நாடாக பங்கேற்றது. கடைசியாக ஜிப்பாப்வே நாட்டின் வீரர்களின் கொடி அணிவகுப்போடு, வீரர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஈரான் நாட்டின் சார்பில் இந்த கொடி அணிவகுப்பில் ஒரே ஒரு வீராங்கனை மட்டும் பங்கேற்றார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சர்வதேச வீரர்களின் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது. 186 நாடுகளின் கொடி அணிவகுப்பை முன் நின்று நாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகை தாங்கி வழிநடத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் மாநில அளவிலான செஸ் போட்டி வெற்றியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications