விஜய் நடத்தும் ஆபரேஷன் 'L' பின்னணி! ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்தான் கெடு!
சென்னை: வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மேலும் 10 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிடுவார்கள் என சொல்லப்படுகிறது. இதற்கு "Operation L" (Operation Legislators) என பெயரிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பாராத அளவிற்கு தவெக ஆட்சியை பிடித்தது. இது திமுக, அதிமுகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொதுவாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியை பிடிக்கும்.

தேமுதிக எனும் புதிய கட்சியை ஆரம்பித்த விஜயகாந்தால்கூட தனித்து போட்டியிட்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் விஜய் இந்த சாதனையை செய்துவிட்டார். எனினும் அவரது நாற்காலிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என சொல்லப்படுகிறது.
காரணம் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் ஆகியோரின் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி நடத்துகிறது. விஜய் அவ்வப்போது ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்வியை கடுமையாக விமர்சித்து வருவது சரியல்ல என கூட்டணி கட்சிகள் அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையிலும் விஜய் தொடர்ந்து அதே போல் பேசி வருகிறார். "உங்கப்பாவை காணோம், கொத்து பரோட்டா" என்ற சொற்களை பயன்படுத்தி வருகிறார்.
பொதுவாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழக் கூடியது. இதனால் அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்துக் கொண்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் தவெக எம்எல்ஏக்களாகிவிடுவர்.
இதனால் தவெக பெரும்பான்மை பலத்துடன் சட்டசபையில் எந்த வித அச்சமும் இன்றி இயங்கத் தொடங்கும். இதற்காக அதிமுகவில் எம்எல்ஏக்களுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கு ஆபரேஷன் எல் என பெயரிடப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை இழுப்பதுதான் operation legislators என்பதாகும். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்துள்ளது.
விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து 7 தொகுதிகள் காலியாக உள்ளதால் சட்டசபையின் பலம் 227ஆக குறைந்துவிட்டது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்குள் அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க தவெக முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த மே மாதம் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களில் 6 பேரை தன் பக்கம் தவெக இழுத்துக் கொண்டது. மீதமுள்ள 19 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது.
கொங்கு மண்டலத்திலும் வடக்கு மாவட்டத்திலும் கொடி கட்டி பறக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரையும் இழுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதாம். மேலும் அதிமுகவிலேயே நீடித்தால் நமது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி ஒவ்வொரு எம்எல்ஏக்கள் மனதிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் மேலும் 10 அதிமுக எம்எல்ஏக்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தவெகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாம். இவர்கள் ராஜினாமா செய்வதற்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிப்பதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
மேலும் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அதே தொகுதியில் தவெக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாம். அவ்வாறு பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தால் அவர்களில் வேலுமணி, சம்முகம், விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் தவெக திட்டமிட்டுள்ளதாம். இதனால் பொழுது விடிந்தால் யார் விலகுவார்களோ என்ற அச்சத்திலேயே எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பணபலம், அதிகாரத்தை காட்டி எம்எல்ஏக்களை தவெக இழுப்பதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும் குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கர், மற்றொரு ஊழல் வழக்கில் தொடர்புடைய எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்துக் கொண்டு தவெக ஊழலுக்கு எதிரான கட்சி என விஜய் சொல்லலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது போல் தவெகவுக்கு இவர்கள் வந்ததால் ஊழல் கறைகளை போக்கும் வாஷின் மெஷினாக தவெக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. எது எப்படியோ ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 10 அதிமுக எம்எல்ஏக்கள்தான் தவெகவின் டார்கெட் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications