“உலகிற்கு 2025ல் இந்தியா அனுப்பிய தெளிவான மெசேஜ்” - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பெருமிதம்
சென்னை: இந்தியாவின் ராணுவ வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாகவும், இந்திய ராணுவத்தின் துல்லியம் மற்றும் தேசிய உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நினைவு கூரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை அழித்த இந்தியா ஏராளமான பயங்கரவாதிகளைக் கொன்றது.

இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அத்துமீற முயன்ற பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. 4 நாட்கள் நடந்த இந்த மோதலில் இந்தியாவின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இதனையடுத்து, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் கருதப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஆண்டின் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு மிளிரும் சான்றாக உள்ளது. துல்லியம், தொழில்முறையுடன் இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பின் மையங்களை தாக்கி, தீர்க்கமான அடியை வழங்கி உள்ளது.
இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது. அதை ஆதரிப்பவர்கள் முழு பலத்துடன் பழிவாங்கப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை உலக நாடுகளுக்கு இந்த நடவடிக்கை அனுப்பி உள்ளது. இந்தியாவின் ராணுவ வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாகவும், இந்திய ராணுவ துல்லியம் மற்றும் தேசிய உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் இந்த நடவடிக்கை நினைவு கூரப்படும்." என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications