சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச வாய்ப்பு..அதிமுக என்ற உடன் அமளி..வெளிநடப்பு
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறிய உடன் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் அமளியில் ஈடுபட்டன. ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து சட்டசபையில் பேசினார்.
இந்த மசோதா மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., நாகை மாலி, பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர்.

ஓ.பன்னீர் செல்வம்
இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா விவாதம் இன்றி ஏக மனதாக நிறைவேற வேண்டும் தான் விரும்புவதாக கூறினார். தொடர்ந்து அவர் அதிமுக சார்பில் இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதுதான் எதிர்க்கட்சி,ஓ. பன்னீர் செல்வம் பேசுவது குழப்பத்தை உண்டு செய்வது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுக உறுப்பினர்கள் அமளி
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ நான் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் கோரும் போது ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கினோம் என்று தெரிவித்தார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கினேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications